
பெண்களுக்கு இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி தில்லி ஜந்தர் மந்தரில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த போராட்டத்தில் பேசிய கவிதா,பெண்கள் இடஒதுக்கீடு மசோதா முக்கியத்துவம் வாய்ந்தது.
அதை உடனடியாக கொண்டுவர வேண்டும். மசோதா நிறைவேற்றும் வரை இந்த போராட்டம் நிறுத்தப்படாது என்று அனைத்து பெண்களுக்கு உறுதி அளிக்கிறேன். இந்த மசோதா தேசத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். நாடாளுமன்றத்தில் உடனடியாக இந்த மசோதாவை அறிமுகப்படுத்த பாஜக அரசை வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று ஆதரவளித்து வருகின்றனர்.
தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நாளை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவுள்ள நிலையில், உண்ணாவிரத போராட்டத்தை கவிதா நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது