சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றி உள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்க அ.தி.மு.க. கொணடு வந்த திட்டங்களை கைவிட்டு விட்டன. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத்தொகை பற்றி பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
தமிழக விவசாயிகளுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை. தமிழக அரசு தார்பாய்களை வழங்காததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின்றன.
வேளாண் மானியக்கோரிக்கையில் உள்ளன வற்றை பட்ஜெட்டாக வாசித்து உள்ளனர். விவசாயிகள் பயன் அடையும் வகையில் பட்ஜெட்டில் எந்த ஒரு நன்மையும் இடம் பெறவில்லை. பெரிய திட்டங்கள் எதையும் விவசாயிகளுக்காக இந்த அரசு அறிவிக்கவில்லை.
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்காக வெளியிட்ட அறிவிப்புகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. கரும்பு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ஆதார விலையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்றும் விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை முழுமையாக வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.
ஆனால் இன்று வேளாண் பட்ஜெட்டை 3-ம் முறையாக தாக்கல் செய்தும் அது தொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. எனவே இந்த வேளாண் பட்ஜெட் விவசாயிகளை வஞ்சிக்கும் பட்ஜெட்டாக உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.20 ஆயிரம் வழங்கினோம். ஆனால் இந்த அரசு ரூ.13,500 மட்டுமே வழங்கி உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் தார்பாய்கள் வழங்கி போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் நெல் மூட்டைகள் நனைந்து முளைத்து கொண்டு இருக்கின்றன. காவிரி குண்டாறு திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகாதது கண்ட னத்துக்குரியது.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் நடக்க முடியாத சவலை குழந்தையாக உள்ளதாக அவர் கூறினார்.