
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில், 2-வது பசுமை விமான நிலையம் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டதால் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து 264-வதுநாளாக, ஏகனாபுரம் மக்கள் மொட்டையடித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் விமான நிலையம் இயங்கும் நிலையில்காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இதற்காக, மேற்கண்ட கிராமப் பகுதிகளில் சுமார் 4,500 ஏக்கர் விளைநிலங்கள், நீர்நிலைகள், குடியிருப்புகள், பாசன கால்வாய் உள்ளிட்டவைகையகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின.
இதனால், நிலத்தை இழக்கும் நிலையில் உள்ள கிராம மக்கள் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்புதெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கிராம சபைக் கூட்டங்களிலும் மேற்கண்ட திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
இதில், ஏகனாபுரம் கிராம மக்கள் இரவு, பகல் எனத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக் குழுவினர் 264-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ஆண்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மொட்டைஅடித்து, நெற்றியில் நாமம் இட்டும் திருவோடு ஏந்தியும் பிச்சைஎடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன முழக்கமிட்டனர். இதில், ஏகனாபுரம் மற்றும்அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.