புதுவையில் துவங்கிய ஆதிபுஷ்கரணி விழா..

Published:

978993 - 2026
#image_title

புதுவையில் ஆதிபுஷ்கரணி விழா தொடங்கியது- சங்கராபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். ஆற்றில் குளிக்கும்போது அசம்பாவிதத்தை தவிர்க்க நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். போக்குவரத்து ஆங்காங்கே மாற்றம் செய்யப்பட்டு கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குரு பெயரும் ராசிக்கான நதிகளில் புஷ்கரணி விழா 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். மேஷ ராசிக்கு வடக்கில் கங்கை ஆற்றிலும், தெற்கில் சங்கராபரணி ஆற்றிலும் புஷ்கரணிவிழா இந்த ஆண்டு நடக்கிறது.

புதுவையில் முதல் முறையாக வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலை ஒட்டிய சங்கராபரணி ஆற்றங்கரையில் புஷ்கரணி விழா இன்று தொடங்கியது.

500x300 1869786 puducherry 2 - 2026
#image_title

விழாவையொட்டி நேற்று விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, சப்தநதி தீர்த்தகலச பிரதிஷ்டை, முதல்கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு மங்கள இசை, 6.30 மணிக்கு கோ பூஜை, 7 மணிக்கு புஷ்கர கொடியேற்றம் நடந்தது. பின்னர் 2-வது கால சப்தநதி கலச பூஜை சிறப்பு யாகம், யாத்ரா தானம், கடம்புறப்பாடு நடந்தது. காலை 9.41 மணிக்கு புஷ்கரம் பிறக்கும் நேரத்தில் சப்தநதி தீர்த்த கலசாபிஷேகம் நடந்தது. செங்கோல் ஆதீனம் 103-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சத்யஞான தேசிய பராமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், காரைக்கால் ஸ்ரீமத் ஸ்ரீகண்ட வித்யாபீட ஸ்தாபகர் பாலசர்வேஸ்வர சிவாச்சாரியார், எழிலன் மற்றும் சிவனடியார்கள் புனித நீராடலை தொடங்கி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடினர். வில்லியனூர், புதுவை சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும், கடலூர், விழுப்புரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களுக்காக சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

கவர்னர் தமிழிசை, புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ. சரவணன் குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கோவிலுக்கு வந்து சிறப்பு யாகம் மற்றும் தீர்த்தவாரியில் பங்கேற்று தரிசனம் செய்தனர். புஷ்கரணி விழாவையொட்டி நாள்தோறும் காலை 8 மணி முதல் 11 மணிவரை சிறப்பு யாகம், மதியம் 12 முதல் ஒரு மணி வரை தீர்த்தவாரி, மாலை 6 முதல் 7 மணி வரை கங்கா ஆரத்தி, இரவு 7 முதல் 10 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

புஷ்கரணி விழா மே 3-ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என்பதால் திருக்காஞ்சி ஆற்றங்கரையில் பல்வேறு பாதுகாப்பு, கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பக்தர்களுக்கு ஆலோசனை வழங்க 2 ஆயிரம் சீருடை வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆற்றில் குளிக்கும்போது அசம்பாவிதத்தை தவிர்க்க நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. புதுவையில் புஷ்கரணி விழாவுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த அந்தந்த பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டு வாகன நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

போக்குவரத்து ஆங்காங்கே மாற்றம் செய்யப்பட்டு கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புஷ்கரணி விழாவுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் புதுவை, வில்லியனூர் களைகட்டி உள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img