
பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது.தமிழக கவர்னர் உட்பட பலரும் கேட்டனர்.
நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் (மன் கி பாத்) என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந்தேதி முதல் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக ரேடியோவில் பேசி வருகிறார். தனது உரையின்போது அந்த மாதம் நடைபெறும் நிகழ்வுகள், சாதனைகள், தனி நபரின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நாட்டு மக்களிடம் அவர் பகிர்ந்து கொள்வார்.
மேலும் மனதின் குரல் குறித்து நாட்டு மக்களிடம் கருத்துக்களையும் கேட்டு அதற்கு ஏற்ற வகையிலும் உரையாடி வருகிறார். பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அவரது வானொலி உரையை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பு செய்யப்பட்டது. அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: மனதின் குரல் நிகழ்ச்சியின் ஒவ்வொரு நிகழ்வும் அடுத்த நிகழ்விற்கான அடித்தளமாக அமைகிறது. பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து வேலூர் நாக நதியை மீட்டெடுத்தனர். தமிழகத்தை சேர்ந்த பழங்குடியின பெண்கள் டெரகோட்டா கப்களை ஏற்றுமதி செய்தனர். வேலூரில் 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து நாக நதியை தூர்வாரி சீரமைத்தது பெருமைக்குரியது.
வெளிநாடு சுற்றுலா செல்லும்முன் இந்தியாவில் 15 இடங்களுக்காவது நாம் சுற்றுலா சென்றிருக்க வேண்டும். நாட்டில் சுற்றுலாத்துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இயற்கை வளங்களான ஆறுகள், மலைகள் குளங்கள் உள்ளிட்டவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு நடந்தது.

கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் இதற்காக பிரம்மாண்ட சிறப்பு எல்.இ.டி திரையில் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி தமிழில் ஒலிபரப்பப்பட்டது.
இதில் முக்கிய பிரமுகர்கள், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் போலீஸ் அதிகாரி நடராஜ், ஐசரி கணேஷ், உள்பட 150க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.




