தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் தேமுதிகவைச் சேர்ந்த எல்.கே.சுதிஷ் தில்லியில் சந்தித்து வலியுறுத்தியதாக செய்தி வெளியானது. தமிழக சட்டமன்றத்துக்கு வரும் 2016ல் தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் இப்போதே தயாராகி வருகின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரை நிறுத்தியது. இது தேமுதிகவுக்கும் பாஜகவுக்கும் உரசலை ஏற்படுத்தியது. இருப்பினும், விஜய காந்த் மவுன ஆதரவு அளித்தார். இதனிடையே, பாமக., தன்னிச்சையாக அன்புமணி ராமதாஸ்தான் கூட்டணியின் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தார். இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. பாஜக இது குறித்து விமர்சித்தது. அக்கட்சியின் தேசியச் செயலர் எச்.ராஜா, மேலிடம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார். இதனிடையே, தேமுதிகவும் தன் பங்குக்கு, தங்கள் கட்சித் தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூட்டணியில் நெருக்குதல் கொடுக்கத் துவங்கியிருக்கிறது. தில்லியில் பெற்ற தோல்வியால், பாஜகவை சீண்டும் முயற்சியில் இரு கட்சிகளும் இறங்கியிருப்பதாகவே கருதப் படுகிறது. தமிழகத்தில், தங்கள் தலைமையில்தான் அடுத்த கூட்டணி இடம் பெறும் என்று பாமக., தேமுதிக இரு கட்சிகளுமே போட்டி போடுகின்றன. இந்நிலையில் தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தில்லி சென்றார். அங்கு அவர் பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, ஸ்ரீரங்கம் தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு வெளிப்படையான ஆதரவை தே.மு.தி.க. அளிக்காதது ஏன்? என்பது குறித்து சுதீஷ் விளக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் கூட்டணியில் உள்ள ஒரு கட்சி தன்னிச்சையாக முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்தது குறித்து தங்கள் கட்சியின் அதிருப்தியையும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி பலம் பெற வேண்டும் என்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்க வேண்டும் என்று சுதிஷ் வலியுறுத்தினாராம். அவ்வாறு பா.ஜகஅறிவிக்க வில்லை என்றால், தேமுதிக வேறு ஒரு முடிவை அறிவிக்க நேரிடும் என்று அமித்ஷாவிடம் அவர் மிரட்டலாகக் கூறினாராம். இதை அடுத்து அமித்ஷா அவரிடம், ‘தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் நிறைய இருக்கிறது. தமிழக பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசிய பின்னர் நாங்கள் எங்கள் முடிவை தெரிவிக்கிறோம்’ என்று கூறியுள்ளார். தில்லியில் தங்களுக்கு சாதகமான பதில் கிடைக்காத நிலையில் எல்.கே.சுதீஷ் நேற்று முன்தினம் சென்னை திரும்பியுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும்: சுதிஷ்
Popular Categories



