சென்னை: மீண்டும் முதல்வர் பதவியில் அமர நான் ஆசைப்படவில்லை என தி.மு.க.தலைவர் கருணாநிதி தெரிவித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும் கட்சி பொருளாளருமான மு.க..ஸ்டாலின் 63வது பிறந்த நாள் விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார். திமுகவின் பொருளாளர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக சென்னையில் கொண்டாடப் பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் கருணாநிதி, “இங்கே வழங்கப்பட்டுள்ள 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் முழுமையாக ஏழை, எளிய சாமானிய மக்களுக்கு பயன்படுகின்ற வகையில் இருக்க வேண்டுமென்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை பெறுகின்ற மக்களின் வாழ்த்துக்கள் தம்பி ஸ்டாலின் வயதை இன்னும் 10, 20 வருடங்களுக்கு கூடுதலாக்கும் என்று நம்புகிறேன். இங்கு பேசியவர்கள் நான் மீண்டும் 6வது முறையாக முதல்வராக வர வேண்டுமென சொன்னார்கள். எனக்கு மீண்டும் முதல்வராக வேண்டுமென்ற ஆசை இல்லை. திமுகவை கட்டி காக்க வேண்டும். கடைசி தொண்டன் இருக்கும் வரை இக்கழகத்தினை எதிரிகளுக்கு விட்டுக் கொடுக்க முடியாது. வாடி வதங்கி இருக்கும் ஏழை, எளிய தொண்டர்களுக்கு இந்த கழகத்தை விட்டால் வேறு வழியில்லை என்பதனை உணர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் நலனுக்காக இந்த இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று கூறினார்.

