ஜாதி வேறுபாட்டை உருவாக்க புதிய திட்டமா? பள்ளிகளில் ஜாதிப் பெயரை நீக்கக் கோரி வழக்கு – இந்து சமுதாய பெரியோர்களின் கொடையை இழிவு படுத்தி, அவதூறு பரப்பி விளம்பரம் தேடுவதை மாண்புமிகு நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை….
அட்வகேட் லாரன்ஸ் என்பவர் சாதியின் பெயரால் செயல்படும் கல்வி நிறுவனங்களில் உள்ள சாதி பெயரை நீக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது அவதூறு பரப்பும் உள்நோக்கம் கொண்டது.
பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிப்பில் நமது நாடு இருந்த காலகட்டத்தில், மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வியை நமது மக்களும் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், அன்று வாழ்ந்த அனைத்து சமுதாயப் பெரியவர்களும் தங்களது செல்வங்களை, நிலங்களை வாரி வழங்கி கல்வி நிறுவனங்களை தொடங்கினார்கள். காரணம் ஆங்கிலேய வழிக் கல்வியை கிறித்துவ மிஷனரி நிறுவனங்கள் மதமாற்றத்திற்கு பயன்படுத்தியது மட்டுமல்ல இந்த நாட்டின் கலாச்சாரம் பண்பாட்டிற்கு எதிராக மாணவர்கள் மனதில் நஞ்சை விதைத்தார்கள் என்ற காரணம்தான்.
இதனை மகாகவி பாரதியார் தனது சுயசரிதையில் தெளிவாக குறிப்பிடுகிறார். இத்தகைய சூழ்நிலையில் ஆரிய செட்டியார், ஆரிய வைஸ்ய, க்ஷத்திரிய வன்னியர், இந்து நாடார் பரிபாலன சங்கம், செங்குந்தர் சங்க கல்வி நிறுவனங்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகம் என இன்னும் பல சமூஇஅத்தினர் எந்தெந்தப் பகுதியில் யார் செல்வாக்காக இருந்தார்களோ அவர்கள் தங்களது பங்களிப்பாக கல்வி நிலையங்கள் நிறுவுவதற்கு வாரி கொடுத்து வள்ளல்களாக வாழ்ந்தார்கள்.
தனி மனிதர்களும் அதுபோல இந்து சமுதாய கல்வி மேம்பாட்டிற்கு தங்களது சொத்துக்களை எந்த எதிர்பார்ப்பும் இன்றி கொடுத்த வள்ளல்களாக போற்றப்பட்டனர். உதாரணமாக ராவ் பகதூர் கலவலகண்ணன் செட்டியார், வள்ளல் செங்கல்வரிய நாயக்கர், வள்ளல் தியாகராஜ செட்டியார், வள்ளல் பச்சையப்ப முதலியார், அவினாசிலிங்கம், பொள்ளாச்சி மகாலிங்கம் என நூற்றுக்கணக்கானவர்களை பட்டியலிட முடியும்.
உதாரணமாக வள்ளல் பச்சையப்ப முதலியார் உயிலில் இந்து சமுதாய மாணவர்கள் சம்ஸ்கிருத, தமிழ் கல்வியோடு இன்றைய ஆங்கில கல்வி பயில்வதற்கும் என்று தான் கூறிப்பிட்டுள்ளார். ஆங்கிலேய கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் சர்ச்களுக்கு இந்துக்களிடமிருந்து நிலங்களை பிடுங்கி கொடுத்தபோது, இந்துக்களுக்காக கல்வி நிறுவனத்திற்கும் தர வேண்டும் என போராடி பச்சையப்ப முதலியார் பெற்றதே தற்போது பச்சையப்பன் கல்லூரி உள்ள இடம்.
இன்றும் இயங்கி வரும் அந்தக் கல்வி நிறுவனங்கள்
சமூகம் நடத்துவதோ, இந்து தனி நபர் நடத்தப்படுவதோ, அனைத்து கல்வி நிறுவனங்களும் மத்திய மாநில அரசுகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் நடத்தப்படுகிறது. எந்தவித பாகுபாடும், எள்ளளவும் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். இட ஒதுக்கீட்டு கொள்கை, எல்லோருக்கும் கல்வி, ஏழைகளுக்கு கல்வி உரிமை என அனைத்தும் பின்பற்றப்படுகின்றன.
ஆனால் சிஎஸ்ஐ, புரோடஸ்டன், செவன்துடே அட்வென்டிஸ்ட், பாப்டிஸ்ட், டான் போஸ்கோ, சிரியன் என பலவகையான கிறித்துவ பிரிவுகள் நடத்தும் கல்வி நிறுவனங்களிலும், முஸ்லிம்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மத கல்வி திணிக்கப்படுகிறது. அவை மதங்களின் பெயராலேயே இயங்குகின்றன. இவற்றின் பெயரில் உள்ளது கிறித்துவ சாதிய பிரிவுகளில் ஒரு பகுதி. அங்கு அந்த பிரிவினர்களுக்கு முன்னுரிமை தருவதோடு மற்றவர்களின் பழக்க வழக்கங்கள் கேவலப்படுத்தி மாணவர்கள் மனதளவில் புண்படுத்தப் படுகிறார்கள்.
மேலும் அவர்கள் பள்ளியின் கையேட்டில் இவான்சுலின் நம்பிக்கையை திணிப்பதை சேவையாக பள்ளிகளில் செய்வதாக, அதில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு அதில் மாணவர் பெற்றோர் கையொப்பம் பெறப்படுகிறது.
சாதி கல்வி நிறுவனங்கள் பற்றி அக்கறை உடன் வழக்கு போட்டவர் லாரன்ஸ் என்ற கிறித்துவர். குறிப்பாக திருநெல்வேலி நாங்குநேரியில் சில மாணவர்களுக்கும் ஏற்பட்ட சச்சரவை சாதிய வன்முறை என திசைதிருப்பி பேசப்படும் நிகழ்வும் ஒரு கிறித்துவ பள்ளியில் தான் நடைபெற்றது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
அப்படி வழக்கை நீதிமன்றம் எடுத்து விசாரிக்குமானால் அதன் பார்வையை விசாலமாக்கி கிறித்துவ மிஷனரிகள் குறிப்பாக மதுரை இறையியல் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரியில் இந்து சாதிய காழ்ப்புணர்ச்சியை தூண்டுகின்ற செயல்பாடு குறித்தும் மரியாதைக்குரிய நீதிபதி விசாரணை செய்ய வேண்டும் என்பது நமது தாழ்மையான கோரிக்கை.
எனவே இந்து கல்வி நிறுவனங்கள் மீது அவதூறு பரப்புவும், தற்போது சாதிய எதிர்ப்பு உணர்வை நசுக்குவதாக விளம்பரம் தேடவும் இதுபோன்ற வழக்கை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் எனவும் கல்விக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி கொடை வழங்கிய பெரியோர்களின் பெயரில் அவதூறு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.