கோவை – பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி, அயோத்தியில் நடந்த விழாவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜன.22ம் தேதி நடக்கிறது. இதனையடுத்து பக்தர்களின் வசதிக்காக அந்நகர ரயில் நிலையம் ரூ.240 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, புட் பிளாசா, பூஜை கடை, லிப்ட், எஸ்கலேட்டர் உள்ளிட்ட நவீன வசதிகளுடன், குழந்தை பராமரிப்பு அறை, சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டடம், பயணிகள் நுழையவும், வெளியேறவும் தனி வாயில் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த புனரமைக்கப்பட்ட ரயில் நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்ததுடன் அதனை பார்வையிட்டார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கோவை – பெங்களூரு உள்ளிட்ட 6 வந்தே பாரத் மற்றும் 2 அம்ரீத் பாரத் ரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வந்தே பாரத் ரயில் சேவை
- கோவை முதல் பெங்களூரு வரையிலும்
- காஷ்மீரின் ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா நகரில் இருந்து புது டில்லி வரையிலும்
- பஞ்சாபின் அமிர்தசரசில் இருந்து டில்லி வரையிலும்
- கர்நாடகாவின் மங்களூரு முதல் கோவாவின் மடகான் வரையிலும்
- மஹாராஷ்டிராவின் ஜல்னா நகரில் இருந்து மும்பை வரையிலும்
- உ.பி.,யின் அயோத்தி முதல் டில்லியின் ஆனந்த் விஹார் வரையிலும் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அம்ரீத் பாரத் ரயில் சேவை
பீஹாரின் தர்பங்கா நகர் – உ.பி.,யின் – அயோத்தி வழியே டில்லியின் – ஆனந்த் விஹார் வரை ஒரு அம்ரீத் பாரத் ரயிலும் மேற்கு வங்கத்தின் மால்டா நகர் முதல் பெங்களூரு ரயில் நிலையம் வரையில் மற்றொரு அம்ரீத் பாரத் ரயிலும் இயக்கப்பட உள்ளது. இதனையும் பிரதமர் துவக்கி வைத்தார்.
இந்த ரயிலில், ‛கவச் ‘ தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட பாதுகாப்பு, எல்இடி விளக்கு வசதிகள், சிசிடிவி, மொபைல் சார்ஜிங், வேகமாக பிக்கப் செய்ய, அம்ரித் பாரத் ரயில்களின் முன் மற்றும் பின்புறத்தில் இரட்டை இன்ஜீன்கள் என வசதிகள் உள்ளன. மேலும், முடிவடைந்த 2,300 கோடி மதிப்பிலான ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் துவக்கி வைத்தார்.
8 பெட்டிகள் கொண்டதாக கோவை பெங்களூரு வந்தே பாரத் ரயில் இருக்கும். கோவையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு கிளம்பும் இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக காலை 11:30 மணியளவில் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக பிற்பகல் 1:40 மணிக்கு பெங்களூருவில் இருந்து கிளம்பி இரவு 8 மணிக்கு கோவையை வந்தடையும்.
புதிய திட்டங்கள் தொடக்கம்
இதனிடையே அயோத்தியில், உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பலனடைந்த ஏழை வீட்டிற்கு சென்று தேநீர் அருந்திய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு மத்திய அரசு இலவச காஸ் இணைப்பு வழங்கி வருகிறது. இதனால்,ஏராளமான ஏழைகள் பலன் அடைந்துள்ளனர். அயோத்தி வந்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, உஜ்வாலா யோஜனா திட்டத்தில் பலன் அடைந்தவர்களில் ஒருவரான மீரா மஜ்ஹி என்ற பெண் வீட்டிற்கு சென்றார்.
பிரதமரை பார்த்த குடும்பத்தினர், உற்சாகமாக வரவேற்று, தேநீர் அளித்தனர். அதனை பருகிய மோடி, ஏழைகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் உஜ்வாலா யோஜானா உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், அதனால் கிடைத்த பலன்கள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது, மீரா கூறுகையில் தனக்கு இலவச காஸ் இணைப்பு கிடைத்துள்ளது. முன்பு குடிசை வீட்டில் வசித்து வந்தோம். ஆனால், மத்திய அரசு திட்டத்தால் புதிய வீடு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
பிரதமர் வருவதை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் உற்சாகமாக வரவேற்றனர். அவர்களை நோக்கி கை அசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் அவர்களுடன் செல்பி எடுத்து கொண்டார்.
புதிய விமான நிலையம்
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்தார். பிறகு, சுமார் 15 ஆயிரம் மதிப்புமிக்க மக்கள் நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். பிறகு மோடி பேசியபோது…
உலகில் எந்த நாடாக இருந்தாலும், வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்றால், அது தனது பாரம்பரியத்தை கவனிக்க வேண்டும். வளர்ச்சியும், பாரம்பரியமும் இந்தியாவை முன்னெடுத்து செல்லும்.
நாட்டின் வரலாற்றில் டிச.,30ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்தது.1943 ம் ஆண்டு இதே நாளில் தான் அந்தமான் தீவுகளில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய நேதாஜி, சுதந்திரத்தை பிரகடனம் செய்தார்.
இன்றைய இந்தியா, தனது புண்ணியத் தலங்களை அழகுபடுத்துவதுடன், டிஜிட்டல்தொழில்நுட்பம் நிறைந்த நாடாக உள்ளது. ஜன.,22ல் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் வரலாற்று நிகழ்வை உலக நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ள வந்தே பாரத், அம்ரீத் பாரத் ரயில்கள் மூலம் ரயில்வேத்துறை வளர்ச்சி பெறும்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட துவங்கியதும், ஏராளமானோர், இந்நகரை நோக்கி வர துவங்கினர். இதனை மனதில் கொண்டு, வளர்ச்சி பணிகளை துவக்கினோம். இன்று அயோத்தி விமான நிலையம்,ரயில் நிலையத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
விமான நிலையத்திற்கு மஹரிஷி வால்மீகி பெயர் சூட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் ராமரின் பணிகளை, ராமாயணம் மூலம் நமக்கு அறிமுகப்படுத்தியவர் தான் வால்மீகி. நாட்டிற்காக புதிய தீர்மானம் எடுத்து, புதிய ஆற்றலை நமக்குள் நிறைவேற்ற வேண்டும். இதற்காக 140 கோடி பேரும், தங்களது வீடுகளில் ஜன.,22 அன்று ராமஜோதி ஏற்றி அன்றைய தினம் தீபாவளி கொண்டாட வேண்டும்… என்று தெரிவித்தார்.
அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்ததும், டில்லியில் இருந்து வந்த விமானம் முதலாவதாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும், ‛ஜெய் ஸ்ரீராம்… ஜெய் ஸ்ரீராம்…’ என உற்சாகமாக கோஷமிட்டனர்.