
திருநெல்வேலி சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் சொர்க்கவாசல் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டதற்கு, இந்து சமய அறநிலையத்துறைக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…
திருநெல்வேலி மாநகரம் திருநெல்வேலி சந்திப்பு அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் இங்கு வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வைபவமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க விமர்சியாக நடைபெறும்.
ஆனால் இந்த ஆண்டு (2025) சொர்க்கவாசல் திறப்பு விழா இல்லை என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது பக்தர்களிடையே மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்வுகளே துவங்கப்படவில்லை என்பது தற்போது தான் பக்தர்களுக்கு தெரிய வருகிறது. சொர்க்கவாசல் அருகே பழைய அலுவலக கட்டிடம் இருந்த இடத்தில் மின் கசிவு இருப்பதை காரணம் காட்டி திருவிழாவையே நிறுத்தி வைத்துள்ளது திருக்கோவில் நிர்வாகம் இந்து சமய அறநிலைய துறையின் நிர்வாக சீர்கேட்டை வெளிப்படுத்துகிறது. மின் கசிவு என்பது சில மணி நேரங்களில் சரி செய்யக்கூடிய ஒரு சாதாரண பிரச்சனை இதற்காக பத்து நாள் திருவிழாவையே நிறுத்தி வைத்து வைணவ திருத்தலங்களில் மிக முக்கியமான திருவிழாவாக கருதப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை நிறுத்தி வைத்துள்ளது அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இந்து ஆலயங்கள் சிக்கி சீரழிந்து பாரம்பரியம் அழிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இந்த சம்பவமே உதாரணமாகும். சனாதன ஒழிப்பு என்ற திமுகவின் செயல் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறையை கையில் வைத்துக்கொண்டு தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என பொதுமக்கள் கருதுகின்றனர்
பாரம்பரியமான சொர்க்கவாசல் திருவிழாவை உடனடியாக நடத்த வேண்டும் , வைகுண்ட ஏகாதசி திருவிழாவை நடத்தாமல் நிறுத்திய திருக்கோவில் செயல் அலுவலர் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் திருக்கோவிலின் தக்கார் உதவி ஆணையாளர் ஆகியோர் மீது இந்து சமய அறநிலையத் துறையும் தமிழக அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

