சென்னை: ஏர்செல்லைப் போல் திடீரென அழைப்புகள் சேவை வேலை செய்யாமல் பாதிக்கப்பட்ட ஏர்டெல்லின் சேவை சீராகி விட்டதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், மற்றவருக்கு கால் செய்ய இயலாமல் தவிப்பவர்க்கு ஒரு டிப்ஸ் கொடுத்துள்ளது.
ஏர்செல் போன் வைத்திருப்பவர்களுக்கு அண்மையில், செலபேசி சிக்னல் கிடைக்காமல் அதன் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிப்பட்டனர். இந்நிலையில் திடீரென கடன் நெருக்கடி காரணமாக, தங்கள் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி தேசிய கடன் தீர்ப்பாயத்தில் ஏர்செல் நிறுவனம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதை தீர்ப்பாயமும் ஏற்றுக்கொண்டது. இதனால், ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அவ்வாறே ஏர்செல் வாடிக்கையாளர்கள் மற்ற செல்போன் நெட்வொர்க்குக்கு மாறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஏர்டெல் சேவையிலும் திடீரென பாதிப்பு ஏற்பட்டது. மற்றவருக்கு கால்ஸ் செய்ய இயலாமல் அதன் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிப்பட்டனர். சென்னையின் பெரும்பாலான இடங்களில் சிக்னல் கிடைக்கவில்லை.
இதனிடையே, இன்று மாலை சென்னையில் பாதிக்கப்பட்டிருந்த செல்போன் சேவை சீராகிவிட்டதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டது என்றும், எனவே பாதிக்கப்பட்டிருந்த சேவை சீரானதாகவும் அறிவித்துள்ள ஏர்டெல் நிறுவனம், அவ்வாறு தற்போதும் யாருக்கும் செல்போனில் கால்ஸ் செய்ய இயலவில்லை என்றால், தங்களது செல்போனை ரீஸ்டார்ட் செய்தால் போதும், மீண்டும் இயங்கும் என்று அது கூறியுள்ளது.