
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு சாதனை ஊக்கத் தொகையாக ரூ.85 முதல் ரூ.625 வரை வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள்தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்கள், போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் 1 லட்சத்து 37 ஆயிரத்து 800 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தை முதன்மை நிலைக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளுக்கு இவர்கள் முதுகெலும்பாக உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் திருநாளையொட்டி சாதனை ஊக்கத்தொகை வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 2014-ஆம் ஆண்டில் 91 நாள்கள் முதல் 151 நாள்களுக்குக் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.85 வீதமும், 151 நாள்கள் முதல் 200 நாள்களுக்குக் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195 வீதமும், 200 நாள்கள், அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 வீதமும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால், போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 800 பணியாளர்களுக்கு மொத்தம் ரூ.7 கோடியே 70 லட்சம் சாதனை ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.