அ.தி.மு.க. கவுன்சிலர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை

Published:

 சென்னை அம்பத்தூர் எஸ்டேட் மண்ணூர்பேட்டை மாணிக்கம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் குரு (வயது 52). இவர், சென்னை மாநகராட்சியின் 86-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்து வந்தார். இவருடைய மனைவி மக்ரீன். இவர்களுக்கு ஆண்டோ என்ற மகனும், செஸி என்ற மகளும் உள்ளனர்.

கவுன்சிலர் குரு, அம்பத்தூர் பகுதி அ.தி.மு.க. பிரமுகர்களில் ஒருவர். அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும் அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையம் அருகில் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வந்தார்.

நேற்று மதியம் 1.20 மணி அளவில் குரு, தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். வீட்டில் இருந்து சிறிது தூரம் அவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மட் அணிந்தபடி வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, மின்னல் வேகத்தில் கவுன்சிலர் குருவை சரமாரியாக வெட்டியது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

இதில் படுகாயம் அடைந்த குரு, ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனே அந்த கொலைவெறி கும்பலைச் சேர்ந்தவர்கள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். குருவின் அலறல் சத்தம் கேட்டு அவரது வீட்டில் இருந்தவர்களும், அக்கம்பக்கத்து வீட்டில் இருந்தவர்களும் பதறி அடித்து ஓடிவந்தனர்.

அங்கு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த குருவை மீட்டு திருமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், குரு ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்ணூர்பேட்டை பகுதியில் கூடுதல் போலீசார், குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பின்னர் கொலை செய்யப்பட்ட குருவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் ‘ஜூலி’ வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

குருவை கொலை செய்தவர்கள் யார்?, எதற்காக அவரை வெட்டிக்கொலை செய்தனர்? என்பது தெரியவில்லை. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுபற்றி தகவல் அறிந்ததும் குருவின் உறவினர்களும், அ.தி.மு.க.வினரும் அங்கு திரண்டு விட்டனர். இதனால் அம்பத்தூர் எஸ்டேட் மண்ணூர்பேட்டை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் எஸ்டேட் போலீசார், அங்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img