புதுதில்லி:
தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்புவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இது குறித்து விஜயகாந்த் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது விஜயகாந்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான் மற்றும் ஜி.எஸ்.மணி ஆகியோர், ‘சட்ட மன்றத்தில் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவாதங்கள் மற்றும் நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்வது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. ஆனால் அவையில் நடக்கும் விவாதங்கள் தணிக்கை செய்யப்பட்டு, அரசுக்கு அனுகூலமானவை மட்டும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படுகிறது. இது சட்ட விரோதமானதும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதும் ஆகும் ’ என்று கூறினர்.
அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், ‘நீங்கள் ஏன் இதனை தனியாக பொதுநல வழக்காக தாக்கல் செய்யக்கூடாது’ என்று கேள்வி எழுப்பினர். இதை அடுத்து, விஜயகாந்த் தரப்பில் நீதிமன்றம் அனுமதித்தால் இந்த மேல்முறையீட்டு வழக்கு வாபஸ் பெறப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி பொதுநல மனுவாக தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் பொதுநல மனு தாக்கல் செய்யும் பட்சத்தில், உயர் நீதிமன்றம் அதை விசாரிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தனர். பின்னர் விஜயகாந்தின் மேல்முறையீட்டு மனுவை அவர்கள் தள்ளுபடி செய்தனர்.
முன்னதாக, தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி டி.ஜெகதீஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012ல் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். ஆனால் நேரடி ஒளிபரப்பு செய்ய நிதிப் பற்றாக்குறை இருப்பதாக தமிழக அரசு பதில் அளித்தது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, விஜயகாந்த் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப அரசின் நிதிநிலை சரியில்லை என்றால், தனக்கு சொந்தமான தொலைக்காட்சி சேனலில் இலவசமாக ஒளிபரப்ப தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார். மேலும் இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
ஆனால், இந்த வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆதாயத்துக்காக இந்த மனு தாக்கல் செய்திருப்பதாகக் கூறி, விஜயகாந்தின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை அடுத்து, விஜயகாந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரர் (விஜயகாந்த்), தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பதிவுபெற்ற ஒரு கட்சியின் தலைவர் என்பதை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது. மேலும், சட்டமன்ற நிகழ்வுகளை மக்களிடம் எடுத்துச் செல்வது அரசின் கடமை. எனவே, சென்னை நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்து, மனுதாரரையும் அந்த வழக்கில் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் – என்று கூறப்பட்டிருந்தது.


