ஊழல் புகார்கள் ஏற்கனவே உள்ள நிலையில் சமூக நலத்துறை கர்நாடகமாநில அமைச்சராக இருப்பவர் ஆஞ்சநேயா. அவர் கடந்த ஜூன் மாதம் சமூக நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளுக்கு தலையணை மற்றும் படுக்கைகள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் இந்த ஊழல் குற்றச்சாட்டை சரியாக நிரூபிக்க முடியாததால் அமைச்சர் நடவடிக்கையில் இருந்து தப்பினார். தொடர்ந்து அவர் ஊழலில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த நிலையில் ஒரு தனியார் டி.வி. சேனல்அமைச்சரை கையும் களவுமாக சிக்க வைக்க முடிவு செய்தது. இதற்காக டி.வி.யில் பணியாற்றும் 2 ஊழியர்கள் காண்டிராக்டர்கள் போல் நடித்தனர்.
முதலில் அவர்கள் சமூக நலத்துறை துணை இயக்குனரை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்கள். மங்களூரைச் சேர்ந்த காண்டிராக்டர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தங்களுக்கு மாணவர் விடுதிக்கு உணவு பொருள் சப்ளை செய்யும் காண்டிராக்ட் வேண்டும் என்று கேட்டனர்.
பின்னர் அமைச்சரின் மனைவியை அவரது வீட்டில் போய் சந்தித்தனர். அப்போது அவர்கள் தங்களது சட்டைப்பையில் சிறிய அளவிலான பேனா போன்ற வீடியோ காமிராவை பொருத்தி இருந்தனர்.
விடுதிக்கு உணவுப்பொருள் சப்ளை செய்யும் காண்டிராக்ட்டுக்கு ரூ.7 லட்சம் கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர். அதை அமைச்சரின் மனைவி பெற்றுக்கொண்டார். பின்னர் இருவரும் சென்று விட்டனர். இதற்கிடையே நேற்று இது தொடர்பான வீடியோ காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சியிலும், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களிலும் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் லஞ்சம் வாங்குவதை கையும் களவுமாக சிக்க வைக்க தாங்கள் நடத்திய நாடகம் என்று டி.வி. செய்தியாளர் கூறினார். மேலும் ரூ.7 லட்சம் பணமும் உண்மையான நோட்டுகள் அல்ல, போலி நோட்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மனைவி மூலம் அமைச்சர் லஞ்சம் வாங்குவதை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இது பற்றி சி.ஐ.பி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
இதுபற்றி முதலமைச்சர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நான் அமைச்சர் சபை கூட்டத்தில் இருந்தபோது இந்த வீடியோ விவகாரம் எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகளின் முழு விவரங்களையும் கேட்டு இருக்கிறேன். அதை ஆய்வு செய்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
சமூக நலத்துறை அமைச்சர் விவகாரம் கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.


