கொலை வழக்குகளில் துப்பு துலக்க எஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்படும் என்று நெல்லை சரக டிஐஜியாக பொறுப்பேற்ற அன்பு தெரிவித்துள்ளார்.
நெல்லை சரக டிஐஜியாக இருந்த முருகன் பதவி உயர்வு பெற்று மதுரை தென்மண்டல ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சிபிசிஐடி எஸ்பியாக இருந்த அன்பு நெல்லை சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். அவர் இன்று டிஐஜியாக பொறுப்பேற்றார். அதோடு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராகவும் கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளார். டிஐஜியாக பொறுப்பேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொலை வழக்குகளில் துப்பு துலக்க எஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்படும்.
சைபர் கிரைம் குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க சிபிசிஐடியில் பயிற்சி பெற்ற அதிகாரிகளை கொண்டு உள்ளூர் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படும். நெல்லை சரகத்தில் நடைபெறும் குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருட்டு வழக்குகளில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றார்.


