தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து மாணவி உள்பட 3 பேர் பலி

Published:

தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில்வேலூர், அரக்கோணம், வாலாஜா பகுதிகளில் சுவர் இடிந்து விழுந்து மாணவி உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் ஆம்பூர் அருகே கானாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பெண் பரிதாபமாக இறந்தார்.

வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. கடந்த 9-ந் தேதி காலையில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே லேசானது முதல் கன மழையும் பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்றும் தொடர்ந்து மழை பெய்தது.

தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள்.

வேலூர் அரியூர் பகவத்சிங் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 37), கூலித்தொழிலாளி. இவருடைய மகள் பிரீத்தி (15). 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஜெயக்குமார் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை தொடர் மழை காரணமாக வீட்டில் இருந்த மண்சுவர் இடிந்து மாணவி மீது விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பிரீத்தி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் மற்றும் அரியூர் போலீசார், வேலூர் தீயணைப்பு துறையினர் சென்று மாணவியின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பா¤சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேலூர் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அரியூர் காவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

இதே போல அரக்கோணம் தாலுகா அமீர்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கெங்கன் (60), கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் தனது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இரவு சுமார் 11.30 மணியளவில் பலத்த மழை பெய்தபோது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய கெங்கன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அரக்கோணம் காவல்நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வாலாஜாவை அடுத்த புலித்தாங்கல் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி அமுதா (55), மகன்கள் சம்பத் (35), லோகநாதன் (30) மற்றும் அமுதாவின் தாயார் சாரதா (75) ஆகியோர் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் பெய்த தொடர் மழையால், நேற்று அதிகாலையில் ஓட்டு வீட்டின் முன்பக்க மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி அமுதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாலாஜா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

தொடர் மழை காரணமாக ஆம்பூர் அருகே உள்ள காரப்பட்டு கொல்லைகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவருடைய மனைவி விஜயலட்சுமி என்ற கிளியம்மாள் (40). இவர் கணவரை பிரிந்து தனியாக அப்பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டி சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

நேற்று முன்தினம் அவரது மகள் திருமணம் திருப்பத்தூரில் நடந்தது. அங்கும் அவர் கலந்து கொள்ளவில்லை. இதனால் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கதவாளம் கானாற்று பகுதியில் செல்லும் வெள்ளத்தில் விஜயலட்சுமி உடல் கரை ஒதுங்கி கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற விஜயலட்சுமி கடந்த 3 நாட்களாக கானாற்றில் குறைந்த அளவு வெள்ளம் வந்ததாகவும், அதில் தவறி விஜயலட்சுமி விழுந்து தண்ணீர் அடித்து செல்லப்பட்டு இறந்திருக்கலாம் எனவும், நேற்று அதிகளவில் தண்ணீர் வந்ததால் உடல் ஒதுங்கி இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img