விவசாய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலித்தொகையை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பழனி அருகே கூலியை விவசாய தொழிலாளர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள புதுஆயக்குடியில் இருந்து வரதமாபட்டிணம் செல்லும் சாலையில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது.
தொடர் மழைகாரணமாக பழனி பகுதிகளில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
பழனி பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு வரதமாநதி நீர்ப்பாசன அமைப்பில் பெரியவாய்க்கால் – பெரியகுளம் நீர்பாசனம் பயன்படுத்துவோர் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் பெரிய வாய்க்கால் தலைவராக மதிமுகவும் , ஆட்சிமன்ற குழுவினராக 5 பேர் உள்ளனர். இதேபோல் பெரியகுளம் பகுதிக்கு தலைவராக கருப்பசாமியும், ஆட்சி மன்ற குழுவினராக 6 பேரும் உள்ளனர். இவர்களில் சிலர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.
சங்க அமைப்பினர் வயல்வெளி உள்ள பகுதிகளில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளை வைத்தனர். அதில் விவசாய கூலி விவர பட்டியலை வெளியிட்டு இருந்தனர். அதில் விவசாய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலித்தொகை குறைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் 5 மணிக்கு விவசாய தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலைக்கு வந்தனர்.
அப்போது வயல் பகுதிகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்த கூலி விவர பட்டியல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயக்குடியில் இருந்து வரதமாபட்டிணம் செல்லும் சாலையில் அவர்கள் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த ஆயக்குடி காவல் நிலையத்தினர், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாய தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு ஏற்கனவே கூலி குறைத்து வழங்கப்படுகிறது. மேலும் கூலியை குறைத்து நிர்ணயம் செய்து உள்ளனர். இது சம்பந்தமாக தொழிலாளர்களை அழைத்து சம்பந்தப்பட்டவர்கள் பேசவில்லை. இவர்கள் எங்களுக்கு கூலியை நிர்ணயிக்க கூடாது. எனவே அறிவிக்கப்பட்ட கூலியை ஏற்றுக்கொள்ளமாட்டோம். மேலும் அறிவிப்பு பலகைகளை உடனே அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
வயல்வெளிகளில் உள்ள அறிவிப்பு பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கூலி பிரச்சினை குறித்து பழனி வருவாய் கோட்டஆட்சியரிடம் மனு கொடுத்தால் தீர்வு காணலாம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர்.
அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து விவசாய தொழிலாளர்கள்மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


