திருநெல்வேலி மாவட்டம்சங்கரன்கோவில் அருகே உள்ள ஜமீன்இலந்தைகுளம் கிராமத்தில் நேற்று மதியம் லேசான மழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் மாலை 4 மணியளவில் பயங்கர சூறாவளி வீசியது.
இந்த சூறாவளி காற்றில் அப்பகுதியில் உள்ள நடுத்தெரு, கீழத்தெரு, பிள்ளையார் கோவில் தெருக்களில் இருந்த 120–க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன.
மேலும் அப்பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. ஏராளமான மரங்கள் கீழே விழுந்தது. நூற்றுக்கும் அதிகமான வாழை மரங்கள் காற்றில் சாய்ந்தன. சூறாவளியால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஜமீன் இலந்தைகுளம் கிராமம் இருளில் மூழ்கியது.
இந்த சூறைக்காற்றுக்கு அப்பகுதியை சேர்ந்த ராமாத்தாள் (80)செல்லத்தாய் (60)சண்முகையா (50) சண்முகத்தாய்
(வயது 45), சின்ன முத்தம்மாள் (50), ராமாத்தாள் (60), கருப்பாயி (55), ஆச்சியம்மாள் (60)ஆகிய 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
பலத்த காயம் அடைந்த ராமாத்தாள் (80) என்பவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு நெல்லை
கோட்டாட்சியர் பெர்மிவித்யா விரைந்து சென்று சேதமான இடங்களை பார்வையிட்டார்.
அனைவரும் அப்பகுதியில் உள்ள சமுதாயநலக்கூடம் மற்றும் பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர் களுக்கு அங்கு உணவுகள் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் ஆகியோர் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினர்.நேற்று இரவு ஜமீன் இலந்தை குளம் கிராமத்திற்கு ஜென ரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது
இந்த நிலையில் ஜமீன் இலந்தைகுளத்தில் உள்ள பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இடங்களை வட்டாட்சியர் சிவக்குமார் பார்வையிட்டார். அப்பகுதி பஞ்சாயத்து தலைவர் வண்ண கருப்பசாமியிடம் மேலநீலிதநல்லூர் ஒன்றிய குழுத்தலைவர் முருகையா, நிவாரண நிதியாக ரூ.1 லட்சம் வழங்கினார்.
சூறை காற்றினால் சாய்ந்த மின் கம்பங்களை 50 பேர் கொண்ட மின் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2–வது நாளாக இன்றும் சமுதாயநலக்கூடம், பள்ளி யில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. .


