நக்கீரன் கோபால், தனக்கு ஆதரவு தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்
கடந்த ஏப்ரல் மாத நக்கீரன் இதழில் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக வெளியான கட்டுரையின் அடிப்படையில் நக்கீரன் கோபால் மீது ஆளுநர் அலுவலகம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் இன்று காலை சென்னை விமானநிலையத்தில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஐபிசி 124-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.
இதனிடையே, சிந்தாதிரிபேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நக்கீரன் கோபாலை சந்திக்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் காவல்நிலைய வாயிலில் தர்ணா மேற்கொண்டார். வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்க கோரியும் மறுப்பு தெரிவித்த காவல்துறையை அவர் கடுமையாக கண்டித்தார். இதைத்தொடர்ந்து வைகோவும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நக்கீரன் கோபாலை விடுதலை செய்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். விடுதலையை தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த நக்கீரன் கோபால் செய்தியாளர்களை சந்தித்த போது, கருத்து சுதந்திரத்தின் பக்கம் நீதி நின்றது. துணைநின்ற அனைவருக்கும் நன்றி என அவர் கூறினார்.




