
சென்னை : தமிழக முன்னாள் முதல்வரும் திமுக.,வின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தாம் பங்கேற்கப் போவதில்லை என மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.
கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக ஏற்கெனவே கமல் நேரம் ஒதுக்கி உள்ளதால், அவற்றில் கலந்து கொள்ள மதுரை செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நடைபெறும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு, நாளை மீண்டும் கமல் சென்னை திரும்புகிறார்.
முன்னதாக, திமுக.,வுடன் கமல் கூட்டணி வைத்துள்ளதாகவும், அவருக்கு கூட்டணியில் 2 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. அதை கமல் அவசரமாக மறுத்ததுடன், தாம் கட்சி தொடங்கிய நோக்கம் என்ன என்பதை அனைவரும் அறிவார்கள் என்றும் டிவிட்டரில் குறிப்பிட்டார்.
கருணாநிதி சிலைத் திறப்பில் பங்கேற்க வருமாறு திமுக., சார்பில் முன்னரே அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. அதில் கமலும் கலந்து கொள்வதாகக் கூறி இருந்தார்.. ஆனால், திடீரென அந்த முடிவை மாற்றிக் கொண்டு, கட்சி சார்ந்த நிகழ்ச்சிக்கு மதுரைக்குச் செல்கிறார் கமல். எனவே கமலின் இந்த திடீர் முடிவுக்கு கூட்டணி விவகாரத்தில் தாம் வலிய வந்து சிக்கிக் கொள்ள விரும்பாததே காரணம் என்று கூறப் படுகிறது.

