ராகுல்காந்தி அழைப்ப்பால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் டெல்லி விரைந்துள்ளனர். நாளை (புதன்கிழமை) முக்கிய ஆலோசனை ராகுல்காந்தியுடன் நடத்த உள்ளார். இதற்காக, காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லி விரைந்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் எல்லாம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் சேர காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தகவலை காங்கிரஸ் கட்சி தலைமைக்கு அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஏற்கனவேதெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அக்கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, டெல்லியில் உள்ள ராகுல்காந்தி வீட்டில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன், தேசிய செயலாளர்கள் சு.திருநாவுக்கரசர், செல்லக்குமார், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கோபிநாத் உள்பட 13 பேர் டெல்லி செல்கின்றனர். தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.
ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், யாருடன் கூட்டணி என்பது குறித்தும், எத்தனை தொகுதிகள் கேட்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே, பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் – லாலு பிரசாத் யாதவ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் போட்டியிட்டு, 25 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில், 5 பேருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்துள்ளது. இந்த திட்டத்தை வகுத்தவர் ராகுல்காந்தி தான்.
எனவே, தமிழக சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி பார்முலாவை கடைபிடிக்கவே ராகுல்காந்தி விரும்புகிறார். அதுவும் தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரஸ் கட்சி இடம்பெறும் என தெரிகிறது. ஏற்கனவே, கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ், 63 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன்பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறமுடியாமல் படுதோல்வி அடைந்தது.
இதே விஷப்பரீட்சையில் மீண்டும் இறங்கக்கூடாது என்ற முடிவில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. இந்த முறை, தி.மு.க. கூட்டணியில் மீண்டும் இணைந்தாலும், கடந்த முறை போல 63 இடங்களை காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கிவிட்டார். அதுமட்டுமல்லாமல், அப்போது 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் 35 இடங்கள் வரை தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதே கூட்டணிக்கு தே.மு.தி.க. வும் வர வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. எப்படியும் இந்த சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியாக உருவெடுத்தால், 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது.
எனவே, இதன் அடிப்படையிலான விஷயங்களே ராகுல்காந்தியின் ஆலோசனையில் இடம் பெறும் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் கூறுகிறது .



