பொதுமக்களின் குறைகளை விரைவாகக் களைந்திடும் வகையில் 24 மணி நேர, கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும் வசதியை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது :-
அம்மா அழைப்பு மையம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சேவையை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் ஜெயலலிதா தொடங்கினார். அதன்படி, 1100 என்ற எண்ணில் அழைத்து பல்வேறு துறைகள் தொடர்பான குறைகளைத் தெரிவிக்கலாம் என்று கூறப்படுள்ளது
முதல்கட்டமாக 138 ஊழியர்களுடன் தினமும் 15 ஆயிரம் அழைப்புகளை ஏற்கும் வகையில் இந்த மையம் செயல்படும் என்றும், தேவைக்கேற்ப இது அதிகரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அழைப்பவரின் விவரம், அவரது குறை ஆகியவை கணினியில் பதிவு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிக்கு மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். எந்தத் துறையின் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரங்கள் குறையைத் தெரிவித்தவருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
பதிவு செய்த குறையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரமும் குறுஞ்செய்தியாக தெரிவிக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


