சென்னை:
அ.தி.மு.க., மாநிலங்களவை எம்.பி., பதவியில் இருந்து சசிகலா புஷ்பாவை பதவி விலக வைப்பதற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, அ.தி.மு.க., தலைமைசட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துாத்துக்குடி மாவட்டம், அடையல் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகலா புஷ்பா. கடந்த 2011 சட்டசபைத் தேர்தலின் போது, ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர், அந்தத் தொகுதி அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற, தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அந்தத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள நேர்ந்தது. அதற்கு பலனாக, உள்ளாட்சித் தேர்தலில், துாத்துக்குடி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இவர் 2014ல் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் மேயர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் எம்.பி.யான சசிகலா புஷ்பா, அ.தி.மு.க., மகளிர் அணிச் செயலர் பதவி, மாநிலங்களவை அ.தி.மு.க., கொறடா பதவி என எட்டிப் பிடித்தார். அரசியலில் ஏறுமுகம் கண்ட சசிகலா புஷ்பாவின் கட்சிப் பதவி, கடந்த 7ஆம் தேதி திடீரென பறிக்கப்பட்டது. அத்துடன், மாநிலங்களவை கொறடா பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மாநிலங்களவை எம்.பி., பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதமும் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தாது மணல் விற்பனையில் பிரபலமானவராக இருக்கும் நபருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அந்த நபரோடு, சசிகலா புஷ்பா நட்பு பாராட்டியதே கட்சிப் பதவி பறிக்கப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்ததாலேயே சசிகலா புஷ்பாவின் கட்சிப் பதவியும் மாநிலங்களவையின் கட்சிக் கொறடா பதவியும் திடீரென பறிக்கப்பட்டதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. ச்சு எழுந்துள்ளது.


