திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
திருவாரூர் தொகுதியில் வரும் 28-ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து, இடைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மாரிமுத்து என்பவர் சார்பில் வழக்கறிஞர் இந்திரா, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்ல் கோரிக்கை வைத்தார்.
20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருப்பதாகவும், கஜா புயல் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் திருவாரூரில் மக்கள் தேர்தலுக்கு தயாராகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் இந்திரா கோரியிருந்தார். ஆனால் அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
தொடர்ந்து, தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், ஏற்கெனவே, மறுத்துவிட்ட நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் மனு தாக்கல் செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பியது.
இதனிடையே, திருவாரூர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது. முதல் நபராக பென்னாகரத்தை சேர்ந்த அக்னி ஸ்ரீராமச்சந்திரன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக, இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்திலும் நேற்று வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரிப்பது குறித்து இன்று முடிவு அறிவிப்பதாக கூறியிருந்த நிலையில் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது குறிப்பிடத் தக்கது.