தேமுதிகவின் சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி இன்று நடைபெற்ற சட்ட மன்ற கூ ட்டத்தில் தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த தமிழக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மதுவிலக்கை அமல்படுத்தும் சூழல் தற்போது தமிழகத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் மட்டும் அமல்படுத்தினால், கள்ளச்சாரயம் பெருகுவதோடு தமிழகத்தின் வருவாய் பிற மாநிலங்களுக்குப் போய்விடும் என்றும் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதியை சுட்டிகாட்டிப் பேசிய அமைச்சர், கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்திற்கிடையே கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழகம் இருப்பதால், இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தினால்தான் இங்கும் அமல்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மதுவிலக்கை அமல்படுத்தினால், மாநிலத்திற்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடு செய்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியபோது, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இருக்கிறதா? என்று வினாயெழுப்பிய நத்தம் விஸ்வநாதன், மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு மதுவிலக்கு குறித்துப் பேச தார்மிக உரிமை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


