தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுக-வைச் சேர்ந்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம் அநாகரீகமான கடுமையான தகாத வார்த்தைகளை பயன்படுத்தி கடலூர் வட்டாட்சியரை கைபேசி மூலம் திட்டிய ஒலிப்பதிவு வாட்ஸ் ஆப்பில் வெளியாகியுள்ளது
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வரலாறு காணாத கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்திலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பெரும்பாலான பொதுமக்கள் அவர்களது சொந்த உடமைகள் அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.
தமிழக அரசாங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு வெள்ள நிவாரணத் தொகையை இன்னும் வழங்கவில்லை எனும் குற்றச்சாட்டும் பல பகுதிகளில் நிலவி வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிமுக அரசாங்கத்தின்மீது கடும் கோபம் கொண்டுள்ளனர் .
இந்த நிலையில் அதிமுக-வை சேர்ந்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம் நிவாரணத் தொகையை அரசிடம் இருந்து உடனடியாக பெற்றுத் தராத காரணத்தால் கடந்த சில தினங்களுக்கு முன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அவரை நேரில் சந்தித்து அவரது அலட்சியமான, மெத்தனமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயத்தை பார்த்து எதிர்ப்பு தெரிவிக்கச் சென்ற ஒரு சிலர், “மக்களின் வரிப்பணத்தை பல்வேறு முறைகேடு, அட்டகாசங்களை செய்து கொள்ளையடிக்கவே அதிமுக-வை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் சுற்றித் திரிவது எல்லாம் ஒரு பிழைப்பா?” என மறைமுகமாக மனம் வெறுத்து அர்ச்சனை செய்தாகவும் சொல்லப் படுகிறது.
மேலும், “அதிமுகவினரின் அட்டகாசத்தை ஒடுக்கும் வகையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவோம்” எனவும் கூறினாராம்.
அதனால் ஆத்திரம் அடைந்த செல்வி ராமஜெயம் அநாகரீகமான, கடுமையான, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி கடலூர் மாவட்ட வட்டாட்சியரை கைபேசி மூலம் அழைத்து திட்டியதாக அந்த மாவட்ட அதிமுக வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் கூறுகிறது.
கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கியதாக பல லட்சங்களை முறைகேடு செய்து சுருட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
கைபேசி மூலம் பேசியபோது வட்டாட்சியரை வறுத்தெடுத்த செல்வி ராமஜெயம் திட்டிய ஒலிப்பதிவு, அவரது புகைப்படம் இணைக்கப்பட்ட காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.


