பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மற்றவர்கள்மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டைக் கூறியே மிரட்டல் அரசியல் செய்து காலத்தைக் கடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள் ராமதாஸின் மகன் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த போது அவர் சுயநல நோக்கத்தில் தன்னிச்சையாக பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது . மேலும் அவரது கட்சியினர் சிலர் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு சிலர் தண்டனையும் பெற்றுள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கெனவே சாதி அரசியல் கட்சி எனும் பெயர் எடுத்துள்ள நிலையில் குடும்ப அரசியல் கட்சி எனும் பெயரையும் எடுக்க ஆயத்தமாகியுள்ளதா எனும் கேள்வியையும் தமிழகம் எழுப்புகிறது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அந்த கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் தொடர்பான பணிகளையும் அக்கட்சி முடுக்கி விட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அந்த கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியாவையும் களமிறக்க பாமக முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் விரும்பும் சென்னை என்ற பெயரில் சென்னை மக்களை நேரடியாக சந்தித்துள்ளார் அன்புமணி. கடந்த 3 நாட்களில் 23 இடங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை அவர் சந்தித்து பேசியுள்ளார்.
அதேபோல், தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளரான அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா, தனது நாத்தனார் கவிதாவுடன் தொகுதி முழுவதும் சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தனது கணவர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்கிறார். குறிப்பாக, பொது இடங்களில் புகை பிடிக்க தடை, 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடம் கூறி தொடர்ந்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அரசின் திட்டங்கள், சட்டங்கள் பற்றியெல் லாம் விமர்சித்துப் பேசுகின்ற மெத்தப் படித்தவர்களும் வசதி படைத்தவர்களும் தேர்தல் நாளன்று வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என்ற கருத்து பரவலாகவே இருந்துவருகிறது. ஆனால், வசதி படைத்தவர்களாக இருந்தாலும், அரசியல்வாதிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றால், தவறாமல் வாக்களித்து விடுகின்றனர். அத்துடன், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டிக் களத்தில் இருந்தால், அவர்களின் வெற்றிக்காக அந்தக் குடும்பத்துப் பெண்கள் தெருவில் இறங்கி பிரச்சாரம் செய்வதையும் பார்க்க முடிகிறது.
கனிமொழி, பிரேமலதா போன்றவர்கள் நட்சத்திரப் பேச்சாளர்களாக தமிழகம் முழுவதும் வலம் வந்து பிரச்சாரத்தில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப்போல இல்லாவிட்டாலும், சில முக்கிய அரசியல் குடும்பத்துப் பெண்கள் தேர்தலில் போட்டியிடும் தங்கள் கணவரின் வெற்றிக்காக குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் தெருத் தெருவாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இந்த பெரிய குடும்பத்துப் பெண்களின் தெருப் பிரச்சாரம், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் வெற்றிக்கு உதவுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏற்கனவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் அவர்களது கட்சி சாதி அரசியல் கட்சி இல்லையெனக் கூறி வருகின்றனர். நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளைத் திரட்ட என்னதான் அவ்வாறு தொடர்ந்து மாறி மாறி கூறி வந்தாலும் அந்த முயற்சி பலன் அளிக்கப் போவதில்லை என்றுதான் பரவலாகக் கூறப்படுகின்றது.
திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் பலர் அந்த கட்சியில் முக்கியப் பதவிகளை வகிப்பதால் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் அந்த கட்சி குடும்ப அரசியல் செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.திமுக தலைவர் கருணாநிதியைப் போன்று தற்போது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவரது குடும்பத்தினரை கட்சியின் முக்கியப் பதவிகளை அடைய தொடர் முயற்சி மேற்கொண்டுதான் உள்ளார்.
மேலும் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதாக மருத்துவர் ராமதாஸ் அறிவித்ததை ரத்து செய்து அந்த கட்சியின் அடிமட்ட உறுப்பினரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் தைரியமும், தெம்பும் அவருக்கு உள்ளதா எனும் கேள்வியை பாமக கட்சியைச் சேர்ந்தவர்களே சிலரும், தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலானோரும் எழுப்புகின்றனர்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மற்றவர்கள்மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டைக் கூறியே மிரட்டல் அரசியல் செய்து காலத்தைக் கடத்தி வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
முதலில் அவரும் அவரது கட்சியினரும் செய்யும் தவறுளை எண்ணிப் பார்த்து திருத்திக் கொண்டு ஊருக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
ஊருக்கு உபதேசம் செய்யும் முன் மருத்துவர் ராமதாஸ் முதலில் திருந்துவாரா என்ன? என்கிறது தமிழகம்.


