ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளைக் கண்டால் 1098 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம்!

Published:

சென்னை:
ஆதரவின்றி சுற்றித் திரியும் குழந்தைகளைக் கண்டால், 1098 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அனைத்து மாநிலங்களிலும் காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை கண்டுபிடிக்க ‘‘புன்னகையை தேடி’’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் நலனோடு தொடர்புடைய துறைகள் மற்றும் காவல்துறை அலுவலர்களை உள்ளடக்கிய ஐந்து குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு காணாமல் போன குழந்தைகள் தேடப்பட்டனர்.

அந்த வகையில் இந்தியா முழுவதும் சுமார் 3 ஆயிரம் குழந்தைகள் பேருந்து நிலையம், கோவில்கள், சுற்றுலா தலங்கள், சாலையோரங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் கண்டுபிடிக்கப்பட்டனர். அதில் பெரும்பாலான குழந்தைகள் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ‘‘புன்னகையை தேடி’’ திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதை தொடர்ந்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை தேடும் பணியாக ‘‘புன்னகையை தேடி’’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியது. அப்போது சென்னையில் 122 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

அதனைத் தொடர்ந்து, ‘‘புன்னகையை தேடி’’ திட்டமானது கடந்த 1-ந் தேதி முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக தமிழகத்தில் காவல் துறை மற்றும் அரசு சாரா அலுவலர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, கோவில்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஆதரவின்றி திரியும் குழந்தைகள் இருப்பின் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆதரவற்ற மற்றும் காணாமல் போன குழந்தைகளின் வாழ்வு ஒளிமயமானதாக அமைய பொதுமக்கள் தங்கள் பகுதியிலோ அல்லது பொது இடங்களிலோ ஆதரவற்ற குழந்தைகளை கண்டால் உடனடியாக ‘1098’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் கொடுக்கலாம் அல்லது அருகே உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img