சென்னை:
மீனவர் நலம் காக்க முழு மதுவிலக்கு தேவை, கச்சத்தீவை மீட்க முதல்வர் ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்’ மேற்கொண்டுள்ள ஸ்டாலின், சென்னை திருவல்லிக்கேணி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மீன் வியபாரிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஸ்டாலின் பேசியதாவது:
மதுவை ஒழிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவிக்கிறார். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என்று கேட்டால் அதுவும் முடியாது என்கிறார். முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதி இல்லாமல் அமைச்சரால் இப்படி அறிவிக்க முடியாது.
திமுக ஆட்சிக்கு வந்தால் போடப்படும் முதல் கையெழுத்து மதுவிலக்கு அறிவிப்பாக இருக்கும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். நாங்கள் செய்வதைத்தான் சொல்வோம். திமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம், மீனவர்களுக்கு கடன் தள்ளுபடி, மீன்பிடி துறைமுக மேம்பாடு, புதிய துறைமுகங்கள், கடன் வசதி, மீனவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை என திமுக ஆட்சியில் மீனவர்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் மீனவர்கள் நலனுக்காக எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
கச்சத்தீவை மீட்போம் என 1991-ல் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால், பிரதமருக்கு கடிதம் எழுதியதைத் தவிர அதற்காக எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. கடந்த வாரம் சட்டப்பேரவையில் 75 நிமிடங்கள் பேசியபோதும் கச்சத்தீவு பற்றியும், மீனவர்கள் பற்றியும் அவர் எதுவும் பேசவில்லை.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிமுக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசுக்கு போதுமான அழுத்தம் கொடுக்கவில்லை.
சட்டப்பேரவையிலும், சென்னை மாநகராட்சி மன்றத்திலும் மக்கள் பிரச்சினைகளை பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி பேசுபவர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கிறது.
சென்னை மாநகரில் மீன் வியாபாரம் செய்துவரும் பெண்கள் உட்பட 152 பேர் இதில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பெண் வியாபாரிகள் பேசும்போது, ‘‘மீன் வியாபாரத்தில் வருமானம் வந்தாலும் குடிப்பழக்கத்தில் எல்லாம் கரைந்து விடுகிறது. இதனால் குடும்பங்கள் சீரழிகின்றன. எனவே, தமிழகத்தில் முழு மதுவிலக்கு கொண்டுவர வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர்.
சிந்தாரிப்பேட்டை பகுதி மீனவர்கள் பேசும்போது, ‘‘சென்னையின் பழமையான மீன் சந்தையான சிந்தாதிரிப்பேட்டை சந்தை இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. எனவே, அருகிலேயே இட வசதியுடன் புதிய மீன் சந்தை அமைக்க வேண்டும்’’ என்றனர்.
Today, as part of the Namakku Naame payanam, I met with the fishermen community who shared their concerns with me. The…
Posted by M. K. Stalin on Wednesday, January 27, 2016


