மாநிலத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி எனும் பெருமையை பெற்று கேரள காவல்துறையில் மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் தலைவராக தற்போது ஸ்ரீலேகா,பணியாற்றி வருகிறார்.
அவருக்கு அந்த மாநிலத்தில் போக்குவரத்து ஆணையாளராக பணியாற்றிவரும் டோமின் தச்சங்கரி,எனும் அதிகாரி 29 வருடங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக ஸ்ரீலேகா அவரது முகனூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா முகனூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
கடந்த 1987ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வுக்கு நான் பயிற்சி பெற்ற காலத்தில் இருந்தே தச்சங்கரி எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார். அவரது தொல்லைகளைக் கடந்த 29 ஆண்டுகளாகத் தாங்கிக் கொண்டு பணியாற்றி வருகிறேன்.
இதனிடையே, எனக்கு எதிராக லஞ்ச வழக்கு விசாரணைக்கு ஊழல் கண்காணிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து ஆணையராக நான் பதவி வகித்த காலத்தில், தனியார் பள்ளிப் பேருந்து ஒன்றுக்கு உரிமம் வழங்கியபோது நான் லஞ்சம் வாங்கியதாக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது, என்னை வழக்கில் சிக்கவைப்பதற்காக, தச்சங்கரி தீட்டியிருக்கும் சதித் திட்டமாகும்.
அதே நேரத்தில், அரசுக்கு எதிராகவோ, நீதிமன்றத்துக்கு எதிராகவோ அல்லது காவல் துறைக்கு எதிராகவோ எதுவும் நான் கூறவில்லை. இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.
பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு குறித்து போக்குவரத்து ஆணையாளர் டோமின் தச்சங்கரி செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
“யாருக்கு யார் தொல்லை கொடுக்கிறார்கள் என்பதை துறையில் உள்ள அனைவரும் அறிவார்கள்; ஸ்ரீலேகாவுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலர் ஜீஜி தாம்சனுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறேன், என்று செய்தியாளர்களிடம் டோமின் தச்சங்கரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் இதுபோன்ற புகார்கள் எழுந்தவன்னம் உள்ளது. காவல் துறையில் பெண் அதிகாரிகளுக்கு ஒரு சில உயர் அதிகாரிகள் பாலியல் தொந்தரவு கொடுப்பது தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது.


