பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற விபத்து ஒன்றில்பெண் ஒருவர் இறந்தார். இதையடுத்து இறந்து போன பெண்ணின் உறவினர்கள், விபத்து ஏற்படுத்தியதாக நினைத்து அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து தாக்குதல் நடத்தினர்.
அப்போது அவர்கள் அந்த காரில் இருந்த தான்சானிய நாட்டைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவரை கீழே இழுத்து அடித்து உதைத்தனர். மேலும், அவரது ஆடைகளையும் களைந்ததாகத் தெரிகிறது. மேலும் அந்த மாணவி அங்கு வந்த பேருந்தில் ஏறி தப்பிக்க முயன்றபோது, அவரைத் துரத்தி சென்ற அந்த கும்பல், அவரை கீழே இழுத்துப் போட்டு உதைத்துள்ளது.
பெங்களூரில் ஆப்பிரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவியை பொதுமக்கள் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக உரிய விளக்கம் மற்றும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையாவிடம், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கோரியுள்ளார்.


