இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு மற்றும் நேபாளம் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய விளையாட்டு போட்டிகள் அசாம் மாநிலத்தின் கவுகாத்தி மற்றும் மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் பிப். 5 முதல் பிப். 12ம் தேதி வரை 12 நாட்கள் நடக்க உள்ளது. இதற்கான துவக்க விழா கவுகாத்தி இந்திராகாந்தி தடகள ஸ்டேடியத்தில் இன்று கோலாகலமாக நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.
கடைசியாக 2010ல் வங்கதேச தலைநகர் தாகாவில் நடந்த 11வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 90 தங்கம் உட்பட 175 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதுவரை நடந்துள்ள 11 தெற்காசிய விளையாட்டிலும் இந்தியாவே அதிக பதக்கங்களை வென்றுள்ளது. இதனால் இம்முறையும் இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை 23 பிரிவுகளில் 228 போட்டிகள் நடக்க உள்ளன. இதில், 3,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் பரிசாக 228 தங்கம், 228 வெள்ளி, 308 வெண்கல பதக்கம் வழங்கப்பட உள்ளது.


