இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் ஆகியோர் வரும் ஏப்ரல் மாதம் தாஜ்மஹாலை காண இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் அவர்களது பயணம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அன்றைய தினம், பக்கிங்காம் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத் சார்பில் அவருக்கு தேனீர் விருந்து அளிக்கப்பட்டது.
அப்போது இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் ஆகியோர் 2016 ஏப்ரல் 10 முதல் 17ம் தேதி வரை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், ஆக்ரா மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். எனினும், வில்லியம் தம்பதியின் பயண நாள் மற்றும் அது தொடர்பான விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.


