இன்று நள்ளிரவு முதல் தனியார் பால் விலை உயர்வு அமுல்

Published:

இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன் ஆரோக்யா பால் நிறுவனம் தனது பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2.00ரூபாய் முதல் 5.00ரூபாய் வரை உயர்த்துவதாக அறிவித்திருந்தது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.

 

தமிழகத்தில் தற்போது பால் உற்பத்தி அபரிமிதமாக இருப்பதுடன், பாலுக்கான கொள்முதல் விலை உயராமல் அப்படியே இருப்பதுடன், பெட்ரோல், டீசல் விலையும் கணிசமான அளவு குறைந்திருக்கும் சூழ்நிலையிலும் தற்போது பால் விற்பனை விலையை உயர்த்துவதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை.

 

பொதுமக்கள் நலன் மீது சற்றும் அக்கறையின்றி, பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்களை கொத்தடிமைகளாக நடத்தி வரும் ஹட்சன் ஆரோக்கிய நிறுவனம் முற்றிலும் தனது சுயநலத்திற்காக, சுய லாபத்திற்காக மட்டுமே இந்த பால் விலை உயர்வை அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன் உடனடியாக பால் விலை உயர்வு அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் எனவும், பால் விலை உயர்வை ஹட்சன் நிறுவனம் திரும்ப பெறாவிட்டால் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பால் விற்பனை விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறோம்.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

 

மேலும் ஆட்டோ கட்டணம், பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் போன்ற கட்டணங்களை தமிழக அரசே நிர்ணயம் செய்வது போல பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்யும் வகையில் “மக்கள் பிரதிநிதி, அரசு அதிகாரி, பால் முகவர்கள்/உற்பத்தியாளர்கள் பிரதிநிதி, தனியார் பால் நிறுவனங்களின் சார்பில் பிரதிநிதி” அடங்கிய “நால்வர் குழு” அமைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

 

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள், பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் நலன் காத்திடும் பொருட்டு நீதிமன்றத்தை நாடுவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img