சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார் என்று கூறிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் கோடிட்டுக் காட்டினார்.
தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 8 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டனர். ஆனால், நட்சத்திரத் தொகுதியான சிவகங்கைக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப் படவில்லை.
முன்னதாக, தமிழகத்தில் காங்கிரஸ் போட்டி யிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய ப.சிதம்பரத்தின் தில்லி வீட்டில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றுள்ளன. விவாதத்தின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து, ப.சிதம்பரம் மிகவும் சீரியஸ் ஆனதாகவும் சொல்லப் படுகிறது.
இந்நிலையில், கூட்டம் முடிந்த சற்று நேரத்துக்கெல்லாம் வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது. அந்தப் பட்டியலில், சிவகங்கை தொகுதி வேட்பாளர் பெயர் மட்டும் இடம்பெறவில்லை.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பன் தொகுதியைக் கேட்டிருப்பதாகக் கூறப் பட்டது. அதே நேரம், ப.சிதம்பரம் தன் மகனுக்காக முரண்டு பிடித்து வந்தார். எனவே இந்த இருவரில் யார் வேட்பாளர் என்று இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதனிடையே காரைக்குடி முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் புஷ்பராஜின் மகன் டாக்டர் அருண் ஆகியோர் பெயரும் வேட்பாளர் பட்டியலில் பரிசீலனையில் உள்ளதாம்.
இந்நிலையில் கே.எஸ்.அழகிரி மற்றும் 9 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களும் இன்று திமுக அலுவலகத்தில் ஸ்டாலினைச் சந்தித்னர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ”சிவகங்கை தொகுதிக்கு இன்று மாலைக்குள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்” என்றார்.