தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் பெரும்பாலும் கோலோச்சுவது, திமுக., அதிமுக., பாரம்பரிய ஆட்கள் தான். பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன் என்று ஒரு காலத்தில் மோதிக் கொண்டவர்கள் இன்று ஒரே கட்சியில்!
இடையில், பசுபதிபாண்டியன், வெங்கடேச பண்ணையார் என்று சாதிக் குழுக்களுக்கு இடையேயான தகராறு! தொடர்ந்து இருவரும் கொல்லப்பட்டனர். நாடார் குழுவை திறம்பட ஒருங்கிணைத்து வந்த வெங்கடேச பண்ணையார் மரணத்துக்கு அதிமுக., தான் காரணம் என்று நாடார் இயக்கம் குற்றம் சாட்ட, அவரது மனைவி ராதிகா செல்வி நீதி கேட்டு நீதிமன்றத்தை அணுக… இடையில் திமுக., ராதிகா செல்விக்கு தளம் அமைத்துக் கொடுத்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று அமைச்சர் ஆகி… பின்னாளில் வெங்கடேச பண்ணையார் மரணம் விவகாரத்தில் பழிவாங்கல் படலத்தை மறந்தே போனார் என்று நாடார் அமைப்பு கொதித்தெழ…
இப்படி அரசியல் சாதிக் கட்சிகளைச் சுற்றியே சுழன்றுகொண்டிருக்க… இப்போது நாடார் சமூகத்தைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் மற்றும் சிலர் சேர்ந்து பனங்காட்டு மக்கள் கழகம் என்ற கட்சியை அண்மையில் துவக்கினார்கள்!
அவர்கள் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தனர்! காரணம், ராதிகா செல்வி. ஆனால், வெங்கடேச பண்ணையார் என்கவுண்டர் விவகாரத்தில் எதுவும் செய்யாமல் அரசியலுக்காக எல்லாவற்றையும் மறந்து விட்டார் என்ற குற்றச்சாட்டுடன் ராதிகாசெல்வியையே விமர்சனம் செய்து வந்த அந்தக் கட்சியிலிருந்த சிலருக்கு, திமுக., ஆதரவு என்பதும் கனிமொழிக்காக வேலை செய்வதும் பிடிக்கவில்லை!
அவர்கள் அதிமுக., ஆதரவு பெற்ற கூட்டணியின் பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்! கட்சி துவங்கி சில நாள்களிலேயே கட்சி இரு பிரிவாகப் பிரிந்து, இரண்டு கட்சிகளுக்கு வேலை செய்து வருகிறது!