சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு விண்ணப்பங்கள் மே 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சேர்ப்பிக்க கடைசி நாள் மே 29ஆம் தேதி. அரசு ஒதுக்கீட்டிலான பொறியியல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 2015-16 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. மொத்தமுள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான பி.இ. இடங்கள் இந்தக் கலந்தாய்வில் நிரப்பப்படவுள்ளன. அண்ணா பல்கலை வளாகத்தில் அமைக்கப்படும் 4 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 60 மையங்களில் பி.இ. கலந்தாய்வு விண்ணப்பங்கள் மே மாதம் 6-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். கலந்தாய்வு விண்ணப்பங்களை www.annauniv.edutnea என்ற இணையதளத்திலிருந்து மே 6-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதி. கலந்தாய்வு தொடங்கும் தேதி, எத்தனை நாள்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட முடிவுகள் பின்னர் எடுக்கப்பட்டு, அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

