அனந்த்:
கணவனின் கருப்பு கலர் பிடிக்கலை என்று காரணம் கூறி, அவரது மனைவி அவரைத் தீர்த்துக் கட்டியுள்ளார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
குஜராத் மாநிலம் அனந்த் மாவட்டத்தில் பெட்லாட் தாலுகா, சுந்தரானா கிராமத்தைச் சேர்ந்தவர் பர்ஸானா பானு. 22 வயதாகும் இவர், தனது கணவர் ஃபரூக் மாலேக் என்ற 22 வயதுக் கணவனை குத்திக் கொன்றுள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம், அவரது கருப்பு தோல் கலர் பிடிக்கவில்லை என்பதுதானாம். இதனை பேட்லாட் தாலுகா டிஎஸ்பி பி ஆர். கேலாட் கூறியுள்ளார்.
பர்ஸானா, ஃபரூக் இருவருமே 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், ஃபரூக்கின் தோல் கலர் பர்ஸானாவுக்குப் பிடிக்கவில்லையாம். இதனால் இருவருமே உடலுறவு கொள்ளவில்லை என்பதுடன், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்படுமாம்.
இதனிடையே அவரது கணவரை தவிர்ப்பதற்காக, பர்ஸானா தனது பெற்றோரின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவிடுவாராம். இதனிடையே 10 தினங்களுக்கு முன்னர் கணவன் வீட்டுக்கு திரும்பிய பர்ஸானாவுடன், ஃபரூக் உடலுறவு கொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால், பர்ஸானா அதனை மறுத்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், புதன்கிழமை அன்று பர்ஸானாவை ஃபரூக் தாக்கியுள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை அன்று தனது வயல் புறத்துக்கு வருமாறு பர்ஸானாவை அழைத்துள்ளார் ஃபரூக். ஆனால், பர்ஸானா ஒரு சுத்தியலை எடுத்து ஃபரூக்கை தலையில் தாக்கியுள்ளார். இதில் ஃபரூக் உயிரிழந்தார்.
இதை அடுத்து பர்ஸானாவைக் கைது செய்த போலீஸார், அவர் மீது, 302வது பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


