சென்னை: அதிகாரிகளின் அச்சுறுத்தலால் ரேஷன் கடை ஊழியர் இளங்கோவன் அண்மையில் தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக, ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் சுமார் 35,000 ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. சென்னை எண்ணூர் அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளங்கோவன், எண்ணூரில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் அவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மேலும், தன்னுடைய கடிதம் ஒன்றில் அதிகாரிகள் அளித்த மன அழுத்தத்தால் தான் தற்கொலை செய்து கொள்வதாக அவர் தெரிவித்திருந்தார். இளங்கோவன் தற்கொலை செய்து கொண்டதற்கு அதிகாரிகளின் நெருக்கடியே காரணம் என்று குற்றம்சாட்டியும், அவரது தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளை மூடி ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் இந்தப் போராட்டம் காரணமாக ரேஷன் கடைகள் மூடப்பட்டிருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனர்.
அதிகாரிகள் மிரட்டலால் ஊழியர் தற்கொலை: 35 ஆயிரம் ரேஷன் கடைகள் மூடல்
Published:

