கன்னியாகுமரி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரைவில் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆவார் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். பவானி சிங் குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவை விட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய பலர் விடுதலையாகியுள்ளனர். அப்படி இருக்கையில் ஜெயலலிதாவும் விடுதலை பெறுவார் என கருதுகிறேன். அவர் விடுதலை குறித்துப் பேசுவதால் நான் அவருக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என நினைக்க வேண்டாம். கடந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகளுக்கு எதிராகவும், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தவன் நான். அடுத்த ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம். வேட்பாளர்களை ஜாதியின் அடிப்படையில் அல்லாமல் மக்களுக்கு யார் நன்மை செய்வார்கள் என்பதை பார்த்து தேர்வு செய்து நிறுத்துவோம் என்றார்.

