புது தில்லி: வெளிநாட்டு நிதிபெறும் 8 ஆயிரத்து 975 தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 2009–10, 2010–11, 2011–12 ஆகிய நிதி ஆண்டுகளுக்கான ஆண்டுக் கணக்கை தாக்கல் செய்யுமாறு 10,343 தொண்டு நிறுவனங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியதில், 229 நிறுவனங்கள் மட்டுமே அதற்கு பதில் அளித்தன. இதைத் தொடர்ந்து, பதில் அளிக்காத 8,975 தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிமம் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களில், நோட்டீஸ் பட்டுவாடா செய்யப்படாமல் திரும்பி வந்த 510 நிறுவனங்களும் இதில் அடங்கும். வெளிநாட்டு நிதிபெறும் ‘கிரீன்பீஸ் இந்தியா’ என்ற தொண்டு நிறுவனத்தின் உரிமம் அண்மையில் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

