ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கற்றுத் தந்த தியாக உள்ளத்தை தன் வாழ்க்கையில் வெளிப்படுத்தி தேசப்பற்று என்பதன் அடையாளத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் மூத்த ஆர்.எஸ்.எஸ்., ஸ்வயம்சேவகர் நாராயண் தபாத்கர்.
இளம் வயது கொரோனா நோயாளிக்கு மருத்துவமனையில் தனக்கு ஒதுக்கப் பட்ட படுக்கையை வழங்கி விட்டு, மருத்துவமனையில் இருந்து வெளியேறி நாக்பூரிலுள்ள தன் வீட்டில் அமைதியாக மரணமடைந்தார் நாராயண் தபாத்கர். இவரது தியாக உள்ளத்தை தனது டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்தியிருந்தார் ஊடகவியலாளரான ஷெபாலி வைத்யா என்பவர்.
அவரது டிவிட்டர் பதிவு… இது!
இந்தப் பதிவில், நாக்பூரைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., மூத்த ஸ்வயம்சேவகர் நாராயண் தபாத்கரின் தியாக உள்ளத்தைப் பதிவு செய்திருந்தார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் மூத்த ஸ்வயம்சேவகர் நாராயண் தபோத்கர். 85 வயதான இவர் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டது தெரியவந்தது. இதை அடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக, அவரது மகள் நாள்கணக்காக பெரும் முயற்சி எடுத்தார். அந்த நேரத்தில், நாரயணின் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே வந்தது.
பெரும் போராட்டத்துக்குப் பிறகு நாக்பூர் மாநகராட்சியைச் சேர்ந்த இந்திராகாந்தி மருத்துவமனையில் நாராயண் தபாத்கருக்கு படுக்கை ஒன்று கிடைத்தது. இதை அடுத்து, நாராயண் தபாத்கரை அழைத்துக் கொண்டு அவரது பேத்தியின் கணவர், மருத்துவமனையில் சேர்ப்பதற்காக வந்தார்.
மருத்துவமனையில் அவரை சேர்ப்பதற்கான நடைமுறைகள் நடந்து கொண்டிருந்த அந்த நேரத்தில், 40 வயதுகளில் இருந்த ஒருவரை அழைத்துக் கொண்டு, அதே மருத்துவமனையில் சேர்ப்பதற்காக இடம் கேட்டு அல்லாடிக் கொண்டிருந்தார் ஒரு பெண். இடம் இல்லை என்பது தெரிந்தது பெருங்குரலெடுத்து அழுதார். அவர்கள் இருவரையும் அண்டிக் கொண்டு, குழந்தைகளும் பரிதாபமாக நின்று கொண்டிருந்தன.
இந்தக் காட்சியைக் கண்ட நாராயண் தபாத்கருக்கு மனத்தில் பெரும் இரக்கம் உண்டாயிற்று. தான் இதுவரை வாழ்ந்துவிட்டோம், இனி இது போன்ற இளையவர்கள் வாழ வேண்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்ட நாராயண் தபாத்கர், தனக்குக் கிடைத்த படுக்கையை இந்த மனிதனுக்கு விட்டுக் கொடுக்க தீர்மானித்தார்.
தனக்கான அட்மிஷன் போட்டுவிட்டு அருகே வந்த தன் பேத்தியின் கணவனிடம் தன் மகளுக்கு போன் போடச் சொல்லி, பேசினார். அவரிடம் தன் முடிவைச் சொல்லி, தான் வீட்டுக்குத் திரும்பப் போவதாகக் கூறினார்.
தந்தையின் மனநிலையை அறிந்தவர் ஆதலால், மகளும் பெரும் தயக்கத்துக்குப் பின் அதனை ஏற்றுக் கொண்டார். மருத்துவர்களை அழைத்து, தன் முடிவைச் சொல்லி, தனக்கான அந்த படுக்கையை, இந்த இளைய வயது நோயாளிக்குக் கொடுத்து, அவருக்கு சிகிச்சை அளியுங்கள், நான் வீட்டுக்குத் திரும்புகிறேன் என்றார்.
நீங்கள் வீட்டுக்கு செல்வது நல்லதல்ல , இங்கேயே சிகிச்சையில் இருங்கள்’ என்று மருத்துவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் நாராயண் தபாத்கர் கேட்கவில்லை.
அவரது முடிவை கனத்த இதயத்துடன் ஏற்றுக் கொண்ட மருத்துவர்கள், அவர் ஆசைப்படியே செய்வதாக உறுதி கூறினர். இதற்கான படிவத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்த நாராயண் தபாத்கர், பின்னர் வீடு திரும்பினார்.
அடுத்த 3 நாட்கள், தன் உறவினர்களுடன் நாட்களைக் கழித்த நாராயண் தபாத்கர் பிறகு அமைதியாக மரணமடைந்தார்.
இது குறித்து நாராயன் தபாத்கரின் மகள் அஷ்லவாரி கோத்வானி கூறிய போது… கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. வீட்டிலேயே சிசிச்சையில் இருந்தார். ஏப்ரல் 22- ஆம் தேதி, உடல் நிலை மோசமானதால் கடும் முயற்சிக்கு பிறகே மருத்துவமனையில் இடம் கிடைத்து சிகிச்சைக்கு அனுமதித்தோம்.
ஆனால், அனுமதித்த சில மணித் துளிகளில் தாம் வீடு திரும்பும் முடிவினை எடுத்து விட்டார். என் தந்தை, அங்கே வந்த இளவயது நோயாளி ஒருவருக்கு படுக்கையை விட்டுக் கொடுத்து வந்துள்ளார். நான் நன்றாக வாழ்ந்து விட்டேன். இனி வாழ வேண்டியவர்கள் வாழ வேண்டும் என்று கூறினார். உயிர் போகும் நேரத்தில், என் தந்தையின் நகங்கள் கறுத்து விட்டன. உணர்ச்சியற்ற நிலையில்தான் அவர் மரணித்தார். ஆனால், வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் உறவினர்கள் மத்தியில் தாம் இருந்ததற்காக மகிழ்ச்சி அடைந்தார்”என்றார் அவர்.
நாராயண் தபாத்கர் மகாராஷ்டிர மாநிலத்தில், புள்ளியல் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இளவயதிலேயே தன்னை ஆர்.எஸ். எஸ் இயக்கத்தில் இணைத்துக் கொண்டு, சமூக நலப் பணிகளின் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். தன் வாழ்நாளின் இறுதியிலும் சேவை மனப்பான்மையுடன் அடுத்தவருக்கு உதவி புரிந்தே மரணத்தை எதிர்கொண்டுள்ளார் என்பதை டிவிட்டர் பதிவுகளில் பலரும் பாராட்டி வருகின்றனர்.