ஈரோடு: ஈரோட்டில் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றவரைக் கழுத்தறுத்து கொலை செய்த இளம்பெண் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஈரோடு மாவட்டம், அந்தியூரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் லாரி மற்றும் ஆட்டோக்களுக்கு சரக்கு ஏற்றும் லோடுமேன் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி மல்லிகா. இவர்கள் பல்லடம் அறிவொளி நகரில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்தார். ஈஸ்வரன் என்பவர் பல்லடம் டி.கே.டி மில் பேருந்து நிறுத்தம் அருகே மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்வி. இவர்களும், அறிவொளி நகரில் வசித்து வருன்றனர். தன் கடையில் வைத்து அறிமுகமான வேலுச்சாமியை தனது மனைவி செல்விக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ஈஸ்வரன். இவர், சிறுநீரகக் கோளாறு காரணமாக ஈரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இரு வாரங்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக ஈஸ்வரன் ஈரோடு சென்றார். இதை சாதகமாகப் பயன்படுத்திய வேலுச்சாமி, தனியாக வீட்டிலிருந்த செல்வியிடம் அத்துமீறி நடந்துள்ளார். இதை அடுத்து, அறிவொளி நகர் புறக்காவல் நிலையத்தில் செல்வி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் வேலுச்சாமியை காவல்நிலையத்துக்கு அழைத்து, அவரைக் கண்டித்து அனுப்பி வைத்தனர் போலீஸார். இந்நிலையில், மீண்டும் ஈஸ்வரன் சிகிச்சைக்காக ஈரோடு சென்றதைத் தெரிந்துகொண்ட வேலுச்சாமி, நேற்று அதிகாலை 2 மணிக்கு, குடிபோதையில் செல்வியின் வீட்டுக் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கினார். தூங்கிக் கொண்டிருந்த செல்வியிடம், பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே நடந்த மோதலில் போதையிலிருந்த வேலுச்சாமி கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்த செல்வி மயங்கிக் கிடந்த வேலுச்சாமியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதன் பின்னர் விடியும் வரை வீட்டினுள்ளேயே இருந்த செல்வி. காலை ஆறு மணிக்கு அரிவாளுடன் சென்று பல்லடம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

