உழவர் பேரியக்கத் தலைவர் சடகோபன் மறைவுக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில்…
பாட்டாளி மக்கள் கட்சியின் விவசாயிகள் அணியான உழவர் பேரியக்கத்தின் தலைவராக இருந்த அன்பு சகோதரர் சடகோபன் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் எனக்கு துணையாக இருந்து கட்சிப் பணி ஆற்றியவர். மிகவும் எளிமையானவர். விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்.
விவசாயிகளை பாதிக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை எனது கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வு காண்பதற்கு பாடுபட்டவர். பலமுறை விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகளைத் திரட்டி வந்து என்னை சந்தித்து உழவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து விளக்கியவர்.
உழவர்களின் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எனது தலைமையில் கருத்தரங்குகள் நடத்துவதற்கு காரணமாக இருந்தவர். மிகவும் துடிப்பான வேளாண் தொழிற்சங்கவாதியாக திகழ்ந்தவர். தமிழகம் முழுவதும் உழவர்கள் மாநாட்டை நடத்துவதற்காக என்னுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்.
உழவர் நலனுக்காகவே தமது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்துக் கொண்ட சடகோபனின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உழவர் பேரியக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் – என்று கூறியுள்ளார்.


