சென்னை: தமிழக அமைச்சர் காமராஜுக்கு எதிராகத் கொடுக்கப்பட்ட ரூ.45 லட்சம் மோசடி புகார் மீது மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகம் முழுவதும் ‘ரியல் எஸ்டேட்’ தொழில் செய்து வருகின்றேன். சென்னை மைலாப்பூரில் 2009ஆம் ஆண்டு வீடு ஒன்று வாங்கினேன். ஆனால், அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய மறுத்தார். அப்போது வக்கீல் ராமகிருஷ்ணன் என்பவர் தன் உறவினர் அதிமுக ராஜ்யசபா எம்பி என்றும், மைலாப்பூர் வீட்டை காலி செய்து தருவதாக ரூ.15 லட்சத்தை 2 தவணையாக வாங்கினார். ஆனால், சொன்னபடி வீட்டை காலி செய்து தரவில்லை. இதையடுத்து அவரது உறவினரான ராஜ்யசபா எம்பியாக இருந்து தற்போது அமைச்சராக உள்ள காமராஜை சந்திக்க, மன்னார்குடியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது காமராஜ், வீட்டை காலி செய்து தருவதாகவும், அதே நேரம் தமிழக சட்டசபைத் தேர்தலில் தனக்கு நன்னிலம் தொகுதியில் ‘சீட்’ கிடைத்திருப்பதாகவும், தேர்தல் செலவுக்கு ரூ.30 லட்சம் தருமாறும் என்னிடம் கேட்டார். நானும் கொடுத்தேன். அவர் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது அமைச்சராக உள்ளார். அதன் பின்னர் அமைச்சர் காமராஜையோ, ராமகிருஷ்ணனையோ என்னால் தொடர்பு கொள்ள முடியாவில்லை. இதையடுத்து, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கடந்த மார்ச் மாதம் புகார் செய்தேன். என்னுடைய புகார் மீது திருவாரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவானந்தம் விசாரணை நடத்தினார். இதை அடுத்து, அமைச்சரின் ஆட்கள் என்னை வீட்டுக்கே வந்து தாக்கினர். இதனால், உயிருக்கு பயந்து நான் தலைமறைவாக வாழ்ந்து வருகிறேன். எனவே, அமைச்சர் காமராஜ் மீது நான் கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யும்படி திருவாரூர் மாவட்ட போலீஸ் எஸ்பி., உத்தரவிட வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் கிழமை இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் தனது உத்தரவில், ‘மனுதாரர் விசாரணைக்காக வருகிற 30ஆம் தேதி மன்னார்குடி டிஎஸ்பி முன்பு நேரில் ஆஜராக வேண்டும். அப்போது, மனுதாரருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு குறித்து டிஎஸ்பி விசாரணை நடத்தி, அதில் முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த வழக்கு அதிமுக வட்டாரத்திலும், அமைச்சர்கள் வட்டாரத்திலும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோசடி முகாந்திரம் இருந்தால் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதியலாம்: உயர் நீதிமன்றம்
Popular Categories


