மும்பை: ஐபிஎல் சூதாட்டப் புகார் காரணமாக கடந்த ஆண்டு கிரிக்கெட் வாரிய தலைவராக தாற்காலிக பொறுப்பில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். அப்போது, கவாஸ்கருக்கு, அவரது பிற பணிகளைக் கணக்கில் கொண்டு சம்பளத்தைக் கணக்கிட்டுக் கொடுக்கும்படி பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து கவாஸ்கர், பிசிசிஐக்கு எழுதியுள்ள கடிதத்தில், தான் ஐபிஎல் பணிகளைக் கவனித்துக் கொண்டதற்கான ஊதியமாக ரூ.1.90 கோடி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தான் பிசிசிஐ தலைவராகப் பணியாற்றிய போது, தனது பிற பணிகளான டிவி வர்ணனை, மீடியாக்களுக்கு பேட்டி, கட்டுரை விமர்சனம் எழுதுவது உள்ளிட்டவற்றை நிறுத்தியதால் ஏற்பட்ட இழப்பீடாக இந்தத் தொகையை அவர் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

