அதிமுக.,வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வென்று, தற்போது டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களாக மாறிப்போயுள்ள அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் ஆகியோரால் இப்போது திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் மீது, அதிமுக.,வில் இருந்து அமமுகவில் இணைந்து, அக்கட்சியில் பொறுப்புகள் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகிறது. பரிசுப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்குமாறு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக சபாநாயகர் தனபால், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் அண்மையில் ஆலோசித்து ஒரு முடிவு எடுத்தனர்.
அதன்படி, அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரைத் தொடர்ந்து, இந்த மூன்று எம்.எல்.ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்நிலையில், சபாநாயகருக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கியிருக்கிறார் ஸ்டாலின்.
அந்த மூன்று எம்.எல்.ஏக்களும் அடுத்த ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் உத்தரவிட்ட நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் எதிர்க்கட்சி தலைவர் சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.