ஒரே வருடத்தில் 62,500 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளதாக வெளியான தகவல் சமூக ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 62,500 குழந்தை திருமணங்கள் நடைபெற்று உள்ளன என்று குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் கணக்கு தெரிவிக்கிறது.
பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 18 என்றும், ஆண்களின் குறைந்த பட்ச திருமண வயது 21 என்றும் சொல்கிறது சட்டம். ஆனால், தமிழகத்தில் சமூக நல துறையினர், சமூக ஆர்வலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் இவர்களின் கண்காணிப்பையும் மீறி திருமண வயது எட்டாத பெண்கள் மற்றும் ஆண்களுக்கு திருமணம் நடைபெறுவது தொடர்ந்துகொண்டுதான் உள்ளது!
கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை மாவட்டத்தில் 5180, கோவையில் 3025, மதுரையில் 2840 என்று ஆயிரக்கணக்கான திருமணங்கள் தமிழகத்தின் முன்னேறிய மாவட்டங்களிலும் நடைபெறத்தான் செய்கின்றன.
இவ்வாறு 2017ல் மட்டும் தமிழகத்தில் 62,500 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று உள்ளன என்கிறது குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் கணக்கு.
விழிப்பு உணர்வு இன்மை, கல்வி அறிவு இன்மை, ஏழ்மை, சொத்து மீதான ஆசை, குடும்பங்களுக்குள் உறவு விட்டுப் போகாமல் இருக்க, குடும்ப பிரச்னை காரணமாக என்று பல்வேறு காரணங்கள் குழந்தை திருமணத்துக்காக கூறப்படுகின்றன
சிறிய வயதில் தாயாகும் பெண்ணுக்கும் அவரது குழந்தைக்கும் உடல் ரீதியாக பிரச்னைகள், ஊட்டச்சத்து பிரச்சினைகள் ஏற்படுகின்றன! மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள், அந்தந்த மாவட்டங்களை குழந்தைத் திருமணம் நடைபெறாத மாவட்டமாக வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது!
இது தொடர்பாக, சமூக நலத்துறை அலுவலர்கள், குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினருக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கூட்டங்கள் நடத்தி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்படி திருமண மண்டபங்கள், கோவில்கள், கிராமங்கள் உள்பட எந்தப் பகுதியிலாவது சட்டப்படி திருமண வயது எட்டாத பெண்களுக்கு திருமணம் நடப்பதாக தெரிய வந்தால் உடனடியாக அந்த மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்!
திருமண மண்டப உரிமையாளர்கள், கோயில் நிர்வாகத்தினர் தங்களிடத்தில் உரிய விசாரணை மற்றும் ஆவணங்கள் இல்லாமல் திருமணங்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப் பட்டுள்ளது.
சிறுவயது திருமணங்கள் மூலம் பெண் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்கும் மனதுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்று அரசுத் துறைகளும் சமூக ஆர்வலர்களும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வந்தாலும், பல்வேறு காரணங்களால் வெளி உலகுக்குத் தெரியாமல் குழந்தைத் திருமணங்கள் நடப்பது வருந்தத் தக்கது; இந்தப் புள்ளி விவரம் அவ்வாறு நடைபெறுவதை வெளியுலகுக்கு உணர்த்துகிறது.