என் கணவர் முகிலன் தெளிவான மன நிலையில் இல்லை; அவர் மீது கரூரை சேர்ந்த பெண் அளித்த பாலியல் புகார் பொய்யானது என முகிலனின் மனைவி பூங்கொடி கண்ணீர் பொங்க செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.
கரூரைச் சேர்ந்த இசை என்ற ராஜேஸ்வரி கடந்த பிப்ரவரி மாதம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகிலன் மீது புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், போராட்டங்களுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம், முகிலன் என்னை உடல் ரீதியாக என்னை பயன்படுத்திக் கொண்டார்! என்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டார் என்றும் அந்தப் பெண் புகார் கொடுத்திருந்தார்.
இந்தப் புகார் தொடர்பாக முகிலன் மீது ஏமாற்றுதல், பாலியல் பலாத்காரம், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று அவர் இந்த வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இன்று, முகிலனை சந்தித்த பின்னர் அவரது மனைவி பூங்கொடி செய்தியாளர்களைச் சந்தித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார். அப்போது அவர், ‘எனது கணவர் முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை. அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் அளவுக்கு எனது கணவரின் உடல் நிலை பலவீனமாக உள்ளது. தான் கடத்தப்பட்டதாகவும் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் முகிலன் கூறினார். தன்னை எங்கே அடைத்து வைத்திருந்தனர் என்பது முகிலனுக்கு தெரியவில்லை.
ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்பானவர்கள்தான் என் கணவரை கடத்தியுள்ளனர். அணுக்கழிவு கருத்துக் கேட்புக் கூட்டத்தில் முகிலன் பங்கேற்கக் கூடாது என்பதற்கான செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
அவரை 30 நாட்கள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இன்று காலை எனக்கு நடந்த விபத்தும் கூட திட்டமிட்டு நடந்த விபத்துதான். அது குறித்து போலீஸ் விசாரிக்க வேண்டும். கரூரைச் சேர்ந்த பெண் அளித்த பாலியல் புகார் பொய்யானது’ எனக் கூறினார் பூங்கொடி.